Showing posts with label அந்நியன். Show all posts
Showing posts with label அந்நியன். Show all posts

Wednesday, January 6, 2010

அந்நியர்களும் அன்னை தெரசாவும்...





கடந்த சில நாட்களாக சில அன்னியர்களையும் , அன்னை தெரசாவையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருகிறது. அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்நியன் நம்பர் ஒன்று :

கடந்த வாரம் நானும் என் தந்தையும், எல்.ஐ.சி யில் மாதந்திர பிரிமியம் கட்டுவதற்காக திருவான்மியூரில் உள்ள அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அன்றுதான் அந்த மாதத்தின் கடைசி வேலை நாள் என்பதால் , கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கிட்டத் தட்ட இருபது பேர் வரிசையில் நின்றிருந்தனர். அனைவரும் ஏதோ ஒரு அவசரத்தில் இருந்தனர். ஏதோ ஒரு பதற்றம் அனைவரையும் தொற்றிக் கொண்டு இருந்தது. யாருக்குதான் வெயில்காலத்தில் வேர்வை சொட்டச் சொட்ட, வரிசையில் நிற்க பிடிக்கும் ?
அப்போது , முப்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் , கவுன்ட்டர் அருகில் வந்து ( வரிசையில் நிற்காமல் ) , தன்னை பணம் கட்ட அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏதோ அவசர வேலை விஷயமாக, திருவள்ளூர் வரை போக வேண்டுமென்றும் , அதனால் தயவு செய்து தன்னை அனுமதிக்குமாறும் கோரினார்.

இப்போது பணம் கட்ட என்னுடைய முறை.எனக்குப் பின்னால் இருபது பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், நீங்கள் என்ன செய்வீர்கள் ? பணம் பெறுபவரோ , " வரிசையில் நிற்பவர்கள் அனுமதித்தால், நான் பணத்தை வாங்கிக் கொள்கிறேன் " என்று கூறிவிட்டார் ! இதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் , அவர் திரும்பவும் பணம் கட்ட முயற்சித்தார்.

உடனே , வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் வந்து , வரிசையில் நின்று தான் பணம் கட்ட வேண்டும் என்று சத்தம் போட்ட உடனே, பணம் கட்ட வந்தவர் முகம் வாடி வெளியில் சென்றுவிட்டார். இயலாமையும், ஆற்றாமையும் , கோபமும் சேர்ந்து அவரை வெளியில் அனுப்பி விட்டன. என்னைப் பொறுத்தவரை , வரிசையில் நின்றவர் செய்தது சரிதான்.

அந்நியன் நம்பர் இரண்டு :

கிட்டத் தட்ட மேலே சொன்னது போன்ற ஒரு நிகழ்ச்சிதான் இதுவும். நேற்று இரவு கிண்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தேன் (திரும்பவுமா ?) . வழக்கம் போல், ஒருவர் தனக்கு மிக அவசரம் என்றும் , முக்கியமாக காஞ்சிபுரம் வரை போகவேண்டும், எனவே தன்னை பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஏ.டி.எம் மின் காவலரும் அவரை அனுமதிக்க எத்தனித்தார். எனக்கு முன்னால் இருந்தவர்கள், ஆட்சேபம் தெரிவித்ததும் , காவலாளி ஒரு புதிய விதியை கூறினார். போலீஸ் காரர்கள், மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு வரிசையில் நிற்காமலே பணம் எடுக்க உரிமை உண்டு என்றும், மேற்படி நபர் வங்கி அதிகாரி என்றும் கூறினார். அவர் உடனே ஒரு அடையாள அட்டையை காட்டினார். இருந்தும் ,
நம்மவர்கள் வெகுண்டெழுந்து , அவரை பணம் எடுக்க விடாமல் தடுத்தனர். இதிலும் எதுவும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அன்னை தெரசா:

இன்று காலை , புறநகர் பேருந்து ஒன்றில், பயணம் செய்து கொண்டிருந்தேன். நல்ல கூட்டம். ஓட்டுனர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை , எஞ்சின் மீது
அமருமாறு ஓட்டுனர் கேட்டுக் கொண்டார். அவர் உட்காரும்போது , தெரியாமல் தொலைக் காட்சி பெட்டியில் மோதிக் கொண்டார். மூன்று நொடிகள் கழித்து, அவர் தலையில் இருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. அனைவரும் , கர்சீப் எடுத்து அழுத்திப் பிடிக்குமாறு கூறினார்கள். அவரிடம் கர்சீப் இல்லை.

நான், எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே , பின்னால் இருந்து ஒரு புதிய வெள்ளைக் கர்சீப்பை நீட்டினார் ஒருவர். அவர் முகத்தைக் கூட பார்க்க வில்லை நான். முகத்தில் என்ன இருக்கிறது? ஒரு வேளை அன்னை தெரசாவின் முகச் சாயலும் இருக்கக் கூடும்.
என்னைப் பார்த்து நானே வெட்கப் பட்டுக் கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று.


நம் ஒவ்வொருவருள்ளும், அன்னை தெரசாவும், அந்நியனும் உருவாக, கருவாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நம்மில் சிலரே , அவர்களை பிரசவிக்கின்றோம் . இல்லையா ?

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...