ஏன்...?
ஆமா...!
நெஜமாவா ?!
நீ என்ன நம்பல ?!
எப்படி ?!
நேத்திக்குதான் !!
எத்தன பேர் ?
நான் மட்டும்தான் !
எவ்ளோ ?
45 ரூபா !
எங்க ?
தியாகராஜா !
என்னங்க எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
ஆமாங்க நேற்றைக்குதான் மணி ரத்தினத்தின் 'ராவணன்' படம் பார்த்தேன். அதைதான் , அவர் 'பாணியில்' சொல்ல 'ட்ரை' பண்ணேன் ! நீங்க டென்சன் ஆகாம மேலே ( அதாவது , 'கீழே' !) படிங்க !
'ஆக்சுவலா' (!) நான் போன வாரமே 'ராவணன்' பார்க்க போனேனுங்க ! அங்க என்னடான்னா, டிக்கட் இருந்தாதான் தியேட்டர் உள்ளயே உடுவேன்னுட்டானுங்க ! "போங்கடா நீங்களும் உங்க ராவணனும்" ன்னுட்டு, அப்படியே ரோடை கிராஸ் பண்ணி , நம்ம 'ஆஸ்தான' தியேட்டரான ஜெயந்தி தியேட்டருக்கு போய் , 'பிரின்ஸ் ஆப் பெர்சியா (தமிழில்)' பாத்துட்டு வந்துட்டேன்! ராவணன் போயிட்டு புறமுதுகிட்டு வந்ததுல , ஒரு 20 நிமிஷம் MISS பண்ணிட்டேன் ! அந்த படத்துக்கே விமர்சனம் எழுதனும்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன் ! ஆனா, படத்துல ஒருத்தர் பேரும் தெரியாததால, 'பிரின்ஸ் ஆப் பெர்சியா' தப்பிச்சது ! மொத்ததுல, படம் அமர்க்களம் !
சரி , நம்ம ராவணன் பக்கம் வருவோம் ! என்னுடைய 'கொள்கைப்' படி, எந்த விமர்சனமும் இதுவரை படிக்க வில்லை , யாரிடமும் கதையும் கேட்க வில்லை! என் விருப்பப் படி, படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே போய் உக்காந்தாச்சு !
( எனக்கெல்லாம், 'WELCOME' , 'முன் இருக்கையில் கால் வைத்து அசுத்தம் செய்யாதீர்' , 'புகை பிடிக்காதீர்', 'அரங்கை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் ' என்று SLIDE போடுவதிலிருந்து படம் பார்த்தால்தான் ஒரு திருப்தி ! இவையும் ஒரு படத்தின் அங்கமாகத்தான் பார்க்கிறேன் நான் !)
இதற்கு முன் , நான் தியேட்டரில் பார்த்த ஒரே மணி ரத்தினம் படம் - 'ஆய்த எழுத்து '! அந்த படத்திற்கும் நான் போன போது கூட்டம் இல்லை! கடந்த வாரம் தியேட்டருக்கு உள்ளேயே போக முடியாத படிக்கு கூட்டம் ! இந்த வாரம் , பாதி தியேட்டர் காலி! ஏன் இந்த வித்தியாசம் ?! இணையமும் , VCD இணைத்து செய்யும் மாயமிது ! படம் வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே, அல்லது வெளியிட்ட நாளன்றே இணையத்தில் காணக் கிடைக்கின்றன அத்துணைத் திரைப்படங்களும் ! ( சில சமயங்களில் வெளியிடுவதற்கு முன்னமே ! )
இதையெல்லாம் தாண்டி இரண்டாவது வாரமும் கூட்டம் வர வேண்டுமென்று சொன்னால் ,படத்தின் விமர்சனங்கள் இந்த இடத்தில் முக்கிய பங்காற்றுகின்றன ! எதிர்மறையான எந்த ஒரு விமர்சனமும் படத்தின் வெற்றியை பெருமளவு பாதிக்கக் கூடும் !
இரண்டு வருடங்களாக பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம்.தமிழிலும் இந்தியிலும், விக்ரமும், அபிஷேக் பச்சனும் தங்களுடைய கதாப் பாத்திரங்களை மாற்றி நடிக்கிறார்கள் என்று பேசப் பட்டிருந்தாலும், தமிழில் அபிஷேக் நடிக்கவில்லை ! இந்தியில் விக்ரம் இருக்கிறாரா என்றும் தெரிய வில்லை ! ( யாராவது RAVAN பார்த்திருந்தா சொல்லுங்க ).
அதிரடியான இசையுடன் (வீரா வீரா !) பெயர் போட ஆரம்பிக்கிறார்கள் ! 'கந்தசாமி' எதிர்பார்த்த வெற்றி அளிக்காததால், விக்ரம் இந்த படத்தினை மிகவும் எதிர்பார்த்திருப்பார் ! நாமும்தானே ?! எதிர்பார்த்ததை கொடுத்திருக்கிறார் , மணி ரத்தினம் விக்ரமிற்கும், விக்ரம் நமக்கும் !
ஐஸ்வர்யா ராயை பார்க்கும் போது, ஏதோ இந்திப் படம் பார்க்கும் 'பீலிங்' ! அவர் பேசும் தமிழும் ஒட்டவில்லை ! இந்தியில் பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ! ( எந்திரன் என்ன செய்யப் போகிறார் ?! ) பழைய மணிரத்தினம் ஹீரோக்களான , கார்த்தி , பிரபுவும் நடித்திருக்கிறார்கள் ! படம் முழுவதும் காட்டுப் பகுதியில் தான் ! அதற்கேற்றவாறு ஒளிப் பதிவில் அசத்தியிருக்கிறார்கள் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் ! கலை இயக்குனருக்கு சற்று சவாலான வேலைதான் ! சமாளித்திருக்கிறார் ! கொச்சியில் இருக்கும் என் நண்பனொருவன் , அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு போன போது, அந்த கோவில் செட் - ஐ பார்த்ததாகவும், மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும் சொன்னான்! நானும் படம் வெளிவருவதற்கு முன்னரே புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன் !
வசனங்கள் - சுஹாசினி. படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் வசனங்கள் என்னவென்று புரியவில்லை! காரணம் அவரா , அல்லது ஒலிப் பதிவா, இல்லை தியேட்டர் ஸ்பீக்கரா, இல்லை நம்ம காதா என்று புரிவதற்குள் அடுத்தடுத்த வசனங்கள் ! ஆனால் கொஞ்ச நேரம் கழித்து புரிய ஆரம்பித்து விடுகின்றன ! நடுவே வரும் ப்ரியாமணி செக்மென்ட்டில் மட்டுமே கொஞ்சம் காடுகளில் இருந்து வெளிவந்திருக்கிறது கேமரா !
இசை - A . R ரஹ்மான் ! வேறென்ன சொல்ல ?! சூப்பரப்பு ! ( இருந்தாலும் 'செம்மொழி' பாட்டு மாதிரி இல்லையே என்று சொல்லப் படாது !) ' உசுரே போகுது ' பாட்டு முழுவதுமாக வருவதில்லை போன்ற ஒரு தோற்றம் !
திரைக்கதை & இயக்கம் - மணி ரத்னம். இவரின் ஓரிரு படங்களைத் தவிர மற்ற அனைத்திலும் எதாவது ஒரு உண்மை சம்பவமோ , அல்லது இதிகாசமோ தான் "BASE LINE" ஆக இருக்கும் ! இந்த வகையில் , இப்படத்தின் கதாப் பாத்திரங்கள், யாரைக் குறிக்கின்றன என்று ராமாயணம் அறிந்த அனைவரும் எளிதில் ஊகிக்க முடியும் ! இருப்பினும் பெயர் போடும் போது , " இப்படத்தில் வரும் கதாப் பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல ! " என்றுதான் போடுகிறார்கள் !
எது எப்படி இருந்தாலும், 'படம் நல்லா இருந்துச்சு ' என்று சொல்ல வைத்து விடுகிறார் மணிரத்னம் !
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ?! பிருத்விராஜ் ! கதா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்கிறார் ! வாழ்த்துக்கள் பிருத்வி !