Wednesday, December 30, 2009

கந்த கோட்டை - விமர்சனம்




கடந்த சனிக் கிழமை அன்று திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில், ' கந்த கோட்டை ' படம் பார்த்தேன். வழக்கம் போல இருபது ரூபா டிக்கெட்டுதான் ! (வேற வழி ?)!. போறதுக்கு முன்னாடி, நம்ம பசங்க எவனாவது வரானுங்களான்னு கேட்டேன். ' எந்த படத்துக்கு போறடா ? ' னு கேட்டாங்க. ஒண்ணு, வேட்டைக் காரன் .இல்லாட்டி கந்த கோட்டை-க்கு போவேன்னு சொன்னேன்.

' வேட்டைக் காரன் சி.டி ரூம்லேயே இருக்கு மச்சி ' அப்டின்னாங்க. (நான் திருட்டு சி.டி பார்ப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் !) .சரி, கந்த கோட்டை வரியாடானு கேட்டதுக்கு, இல்லடா னுட்டாங்க. தியாக ராஜாவுலதான் வேட்டைக் காரன் போட்டிருந்தாங்க. மக்கா , என்ன கூட்டம் ? இது வேலைக்கு ஆவதுன்னுட்டு, நாம கந்த கோட்டைக்கே போயாச்சு.

நான் பார்க்கும் முதல் நகுலன் படம் இதுதான். தன் பெற்றோர் காதல் திருமணம் செய்தாலும், அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, காதலையே சுத்தமாக வெறுக்கிறார் நகுலன். அனால் அவரையே, காதல் செய்ய வைக்கும் அளவுக்கு நாயகி பூர்ணா என்ன செய்கிறார் , அல்லது என்ன நடக்கிறது , அவர்களின் காதலுக்கு என்ன ஆச்சு என்பதை சொல்லும் படம் தான் இந்த கோட்டை.

ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற , நகுலன் முயற்சி செய்திருக்கிறார். அதற்கேற்றார் போல், ஒரு அறிமுகப் பாடலும்,இரண்டு சண்டைக் காட்சிகளும் சேர்க்கப் பட்டுள்ளன. நகுலனின் நண்பனாக நம்ம சந்தானம் வழக்கம் போல் கலக்கி இருக்கிறார்.சந்தானம் வரும் இடங்களில் தியேட்டரில் கைத் தட்டல்கள். பாடல்களில், ' உனைக் காதலி என்று சொல்வதா ?' மட்டும் கொஞ்ச நேரம் ஞாபகத்தில் இருக்கிறது. முதல் பாதியில், அடிக்கடி குறுக்கிடுகின்றன பாடல்கள்.

திரையில் தோன்றும் போதெல்லாம், கத்தி கூப்பாடு பொட்டு , காதை செவிடாக்க முயற்சிக்கிறார் சம்பத். பழைய காலத்து தமிழ் சினிமா வில்லன் கதாப் பாத்திரம்.
அவ்வளவு பெரிய தாதாவிடம் , ' ப்ளே பாய் ' போன்று இருக்கும் நகுலன் சவால் விடுவது , கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களுக்கு இடையில், சற்றே பழைய படங்களை ஞாபகப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் . அதிலும் , அந்த கிளைமாக்ஸ் ! (ஆஹா , இயக்குனர் பேர் மறந்து போச்சே !? , ஆங் , சக்திவேல் (நன்றி : மேலே உள்ள போஸ்டர்). இதுக்கு தான், படம் பார்த்த உடனே விமர்சனம் எழுதிடனுங்கிறது ! நிறைய விஷயம் மறந்து போச்சு !)

கந்த கோட்டை - கொஞ்சம் ஓட்டை.


Saturday, December 26, 2009

சுனாமி நினைவு நாள்...




இன்றுடன் , சுனாமி தாக்கி, ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகின்றன. கடந்த இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு , இதே நாளில் , பல நாடுகளைத் தாக்கிய சுனாமி , கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களை பலி கொண்டது. எனக்கு விவரம் தெரிந்து , குஜராத் நிலநடுக்கத்திற்குப் பிறகு, நான் கேள்விப் பட்ட மிகப் பெரிய இயற்கை சீற்றம் இதுதான். அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருந்த வீட்டில் , பொங்கலை முன்னிட்டு , வெள்ளை அடிக்கும் பனி இருந்து கொண்டிருந்தது. நானும் கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டிற்கு வந்திருந்தேன். முதன் முதலில்,காலை எட்டு மணிக்கு சன் டி.வி யில் தான் ' பிளாஷ் ' நியூஸ் போட்டார்கள். " சென்னையில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது . நூற்றுக் கணக்கான மக்களை காண வில்லை " என்று. பிறகு ஆழிப் பேரலை என்று அறிவித்தார்கள். ஒரு நாள் கழித்துதான் , தொலைக் காட்சிகளில் ' சுனாமி ' என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தினார்கள். சுமத்ரா தீவில், ஏற்பட்ட நில நடுக்கம் தான் சுனாமிக்கு காரணம் என்றும் அறிவித்தனர்.

இந்தோனேசியா , இலங்கைக்கு பிறகு , சுனாமியால் அதிகம் பாதிக்கபட்ட நாடு, இந்தியாதான். தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலமும், சுனாமியால் இந்த அளவு பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் மொத்த உயிரிழப்பு ஐந்து ஆயரதிற்கும் குறைவுதான் என்று சட்டப் பூர்வமாக அறிவித்தாலும், மொத்த உயரிழப்பு , பத்தாயிரத்தைத் தொடும் என்று கூறப் படுகிறது.

உயிரிழப்புகளைத் தாண்டி உலகம் சந்தித்த பாதிப்புகள், ஏராளம். உடல் ஊனமுற்றவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலுக்கான ஆதாரங்களை இழந்தவர்கள் என்று அந்த பட்டியல் நீள்கிறது. ஆனால் , அப்போதும் , இறந்தவர்களின் உடம்பிலிருந்து , நகைகளைத் திருடிய சம்பவங்களும் நடந்தன . இந்த ஐந்தாம் ஆண்டு நினைவு நாளிலும், சுனாமியால் பாதிப்படைந்தவர்கள் தங்களுக்கான நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவதைக் காண முடிகிறது !

நான் கல்லூரி படிக்கும் போது, எங்கள் கல்லூரி சார்பில் வெளியிடப் பட்ட ஒரு புத்தகத்தில், நான் எழுதிய ஒரு கவிதையை ( ! ) பிரசுரம் செய்தார்கள்.

-------------------------------------------------------------------------
காடு மேடு வாங்கியவர்களிடம் காசு வாங்கினால் - பினாமி ,
காற்று வாங்க வந்தவர்களை காவு வாங்கினால் - சுனாமி .
-------------------------------------------------------------------------

இதைப் படித்த எனது நண்பர்கள், இது வேறு யாரோ எழுதியதைப் போல் உள்ளதாகவும், ஏற்கனவே எங்கோ படித்த ஞாபகம் இருப்பதாகவும் கூறினார்கள். உங்களுக்கு எப்படி ? எதற்கும் இந்த பக்கத்தின் மேலே உள்ள , ' டிஸ்க்ளைமர் ' ஐ, ஒருமுறை படித்து விடவும்.


Sunday, December 20, 2009

கலைஞருக்கு தமிழ்த் தலை மகன் விருது...




இன்று மாலை , நண்பனுடன் வள்ளுவர் கோட்டத்திற்கு சென்றிருந்தேன் (ஆ ... ஊ.. ன்னா கெளம்பிர்றாங்க.... ! ) . கலைஞருக்கு , கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ' தமிழ்த் தலை மகன் ' விருது வழங்கும் விழா.

துணை முதல்வர், மத்திய - மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கட்சிக் காரர்கள் , தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், பத்திரிக்கை - ஊடகப் பணியாளர்கள் ,பொது மக்கள் என எல்லோரும் வந்திருந்தும், ஏனோ கூட்டம் குறைவாகவே இருந்தது . விழாவிற்கு , அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமை ஏற்பதாக இருந்தது. அனால் உடல் நலம் குன்றியதால் அவர் வரவில்லை. திரு . வா. செ . குழந்தைசாமி தலைமை ஏற்றார். நடிகர் சிவகுமார், கவிப் பேரரசு வைரமுத்து , முனைவர் . அவ்வை நடராசன், திரு. குமரி அனந்தன் ஆகியோர் கலைஞருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மூன்று மாதங்களில் , கலைஞருக்கு நடைபெறும் நான்காவது பாராட்டு விழா இது. வழக்கம் போல், வைரமுத்து , கலைஞரைப் பாராட்டித் தள்ளி விட்டார்.பதிலுக்கு கலைஞரும் ! சிவகுமார் பேச ஆரம்பித்த உடன் , ஏனோ தெரியவில்லை , விசில்கள் பறந்தன . விழாவின் இறுதியில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் உண்டாக உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தனர் . ஏற்புரையில், கலைஞர் , கொல்கத்தா மட்டுமல்ல - எங்கெல்லாம் தமிழ்ச் சங்கங்கள் கஷ்டப் படுகின்றனவோ , அவை எல்லாவற்றிற்கும் இந்த அரசு உதவி செய்யும் என்றார். மேலும் தன்னுடைய உதவியாளர் சண்முக நாதனைப் பற்றியும் நெகிழ்ந்து பேசினார். கலைஞர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் கொஞ்சம் பேர் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களை, சிலர் போக வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தனர். முதல் முறையாக கலைஞர் பேச்சை நேரடியாக கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது.

நிகழ்ச்சியை திருமதி.பர்வீன் சுல்தானா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அநேகமாக, கலைஞர் தொலைக் காட்சியில் இந்த விழா ஒளிபரப்பாகும் . விழா முடிந்து , எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்கும் போது , நானும் நண்பனும் , திரு . குமரி அனந்தன் அவர்களை சந்தித்து பேசினோம். மிகவும் கனிவாக பேசினார் - எளிமையான மனிதர். எங்கள் விருப்பப் படி , அவருடன் புகைப் படம் எடுக்கவும் இசைந்தார். என் நண்பனும், திரு. குமரி அனந்தனும் இருக்கும் படம் தான் , மேலே உள்ளது ! மேலும் திருமதி . பர்வீன் சுல்தானாவையும் சந்தித்து பேசினோம் . ஆனால் அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்ற வில்லை !

என்னைப் பொறுத்த வரை, கலைஞருக்கு தமிழ்மொழி தொடர்பாக எந்த விருது கொடுத்தாலும் , அதற்கு அவர் தகுதி உடையவரே!


Thursday, December 17, 2009

புதிய பதிவு போடுவது எப்படி ?





முன்குறிப்பு : இது , சும்மா , விளையாட்டுக்கு நான் போடும் பதிவாகும். சீரியசான பதிவர்கள் இதைப் படித்துவிட்டு என் மேல் கடுப்பாக வேண்டாம். இதை ஒரு புதிய பதிவரின் ஆர்வக் கோளாறு என்றும் எடுத்துக் கொள்ளலாம். தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் போல் வலைதளங்களும் மக்கள் அதிகம் புழங்கும் மீடியாவகும். எனவே இதை நான் மிகவும் மதிக்கிறேன் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------

கூகிள் புண்ணியத்திலோ அல்லது வேர்டு பிரெஸ் புண்ணியத்திலோ ஒருவழியாக, ஒரு இலவச பிளாக் வெகு சுலபமாக கிடைத்து விடுகிறது. ஆனால், கல்யாண பந்தியில் , அளவு தெரியாமல் நிறைய சாப்பாடு வாங்கிக் கொண்டு, கடைசியில் சாப்பிட முடியாமல் முழிப்பதை போன்று, ஒரு புதிய பதிவு போட முழித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பதிவு இது.

புதிய பதிவு போட என்னால் முடிந்த சில யோசனைகள் :

>> மென்பொருள் துறையில் பணிபுரியும் பலருக்கு, தினமும் பல ' பார்வார்ட் ' மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் ஏதாவது ஒன்றை , புது பதிவாக போட்டு , இறுதியில் நண்பன் மெயில் பண்ணியது என்று பின் குறிப்பிடலாம்.

>> ஏதாவது , ஒரு பத்திரிகை செய்தியை அப்படியே போட்டு கடைசியில் அந்த பத்திரிகைக்கு நன்றி கூறலாம்.

>> உங்கள் மொபைல் போனில், நீங்கள் எப்போதோ எடுத்த பழைய புகைப்படங்களை போட்டு 'ஆட்டோகிராப் ' என்று தலைப்பிடலாம்.

>> நீங்கள் ஏற்கனவே பிரசுரம் செய்த பதிவை ' மீள் பதிவு ' என்று புது தலைப்பு போட்டு புது பதிவாக கணக்கில் ஒன்று அதிகரிக்கலாம்.

>> சக பதிவர்களின் பதிவையோ அல்லது புதியதாக வெளியிடப்பட்ட புத்தகங்களையோ அல்லது நீங்கள் பார்த்த திரைப்படங்களையோ விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று புது பதிவிடலாம். மதிப்பெண்கள் கூட வழங்கலாம்.

>> உங்களின் பயணங்களை ஒரு ' பயணக் கட்டுரை ' யாக சில படங்களுடன் வெளியிடலாம்.

>> அரசு இயந்திரத்தின் குளறு படிகள், சமூக அவலங்கள் போன்றவற்றை சற்றே கார சாரமாக எழுதலாம். முடிந்த வரை கெட்ட வார்த்தைகளை தவிர்த்தல் நலம்.

>> சில சமையல் குறிப்புகளை அவற்றின் படங்களுடன் போடலாம். நீங்கள் அந்த உணவை செய்து பார்த்துதான் குறிப்புகளை சொல்ல வேண்டும் என்று இல்லை.

>> அல்லது , ' புதிய பதிவு போடுவது எப்படி ? ' என்பதைப் போல , சில யோசனைகளைப் பட்டியலிடலாம். பட்டியல்களுக்கு தேவையான யோசனைகளுக்கு இதைப் போன்ற வலைத் தளங்களின் பதிவுகளை ஒருமுறை வாசித்தால், உங்களுக்கே ஒரு ' ஐடியா ' கிடைக்கும்.


பின் குறிப்பு : முன்குறிப்பை இன்னொரு முறை படிக்கவும்.


Friday, December 11, 2009

முக்கிய நிகழ்வுகள் 2009





இனிதே ( ? ! ) முடியப் போகிறது இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு. பிறகென்ன ? இனிமே எல்லாரும் , டாப் டென் நிகழ்வுகள், விருதுகள் என்று கிளம்பி விடுவார்கள். அந்த வகையில் , என்னைப் பொறுத்த வரையில், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளாக நான் நினைக்கும் ( மொத்தம் பத்துதான் என்றில்லை ! கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஏன் ? பத்துக்கும் மேலான அல்லது குறைவான, முக்கிய நிகழ்வுகள் இருக்கக் கூடாதா என்ன ? ) .

குறிப்பு: இங்கு குறிப்பிடப் படும் வரிசைக்கும் - நிகழ்வின் முக்கியத் துவத்திற்கும் சம்பந்தம் இல்லை !

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் :

இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம் தான். ஏற்கனவே சரிந்து கொண்டிருந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைமை , இந்திய நிறுவனங்களையும் சற்றே ஆட்டம் காண வைத்த நேரம் பார்த்து, சத்யம் ராம லிங்க ராஜு ஒரு பெரிய குண்டைப் போட்டார். தன் நிறுவனக் கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை , பொய்க் கணக்கு மூலம் சேர்த்ததாக கூறியதின் மூலம் , இந்திய நிறுவனகளின் நம்பகத் தன்மையை சோதனைக்குள்ளாக வைத்தார். இந்திய அரசாங்கம் தலையிட்டு , குழுவெல்லாம் அமைத்து , பிரச்சினையை தீர்க்க முயன்றார்கள். ராஜூ கைது செய்யப் பட்டார். ஆயினும் ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே , தகவல் தொழில் நுட்பத் துறையும், சத்யம் ( தற்பொழுது மகிந்திரா சத்யம் ) நிறுவனமும் மீண்டு வருவதைப் போல தோன்றுகிறது. வாழ்த்துக்கள் !
(இது எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை !) .

பன்றிக் காய்ச்சல் :

முதலில் , மெக்ஸிகோவில் இருப்பதாகக் கருதப் பட்ட இந்த நோய் , பிறகு அமெரிக்கா , ஐரோப்பா , ஆசியா என்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து பல உயிர்களுக்கு கண்டம் வைத்தது ! எங்கெங்கு நோக்கினும் முகமூடி அணிந்த மனித முகங்கள் ! பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு முகமூடி , நூறு ரூபாய் வரைக்கும் விற்கப் பட்டது. ( ஒருவேளை இப்படி விற்பவர்களையும் முகமூடிக் கொள்ளைக் கார்கள் என்று அழைக்கலாம் ?! ) இந்தியாவைப் பொறுத்த வரை , புனேவைச் சேர்ந்த ஒரு சிறுமிதான் , இந்த காய்ச்சலுக்கு முதல் பலி என்று அறியப் பட்டது. அதன் பிறகுதான் , நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் மின்னல் வேகமெடுத்தன. ' இந்த சிறுமியால் தான் நோய் பரவியது ' என்று மத்திய சுகாதார மந்திரி குலாம் நபி ஆசாத் சொல்லி , பிறகு சொன்ன வேகத்திலேயே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் ! இன்னமும் இந்த வியாதிக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப் படவில்லை. பாதிக்கப் படுபவர்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் !


இலங்கைத் தமிழர் படுகொலைகள் :

கடந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப் பட்ட , விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை , இலங்கை அரசு தீவிரப் படுத்தியது இந்த ஆண்டில் தான். உலகெங்கிலும் , இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. சர்வதேச அளவில் , ' போர் விதிகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றவில்லை ' என்ற புகார்களை புறந்தள்ளி, ஏப்ரல் மாதத்தில் உச்சக் கட்டத்தை அடைந்த ' போர்' ஒரு வழியாக , மே மாதம் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த போரில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்தை தாண்டும் என்கின்றன, புள்ளி விபரங்கள் . போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாகக் கூறி அவரது சடலத்தையும் காண்பித்தார்கள். ஆனால் இன்னமும் அவரது மரணம பற்றியக் குழப்பங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன , அல்லது ஏற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் , இன்று வரை , முகாம்களில் உள்ள தமிழர்களை மீள் குடியேற்றம் செய்து கொண்டுதானிருக்கிறது இலங்கை அரசாங்கம். ஜனவரிக்குள் இந்த பணி முடிவடைந்து விடும் என்று கூறியிருக்கிறார் ராஜ பக்ஷே. இதே ஜனவரியில் தான் , அதிபர் தேர்தலும் நடக்கவிருக்கிறது இலங்கையில் ! ஆனால், போர்த் தளபதி ' பொன்சேகோ ' , இப்போது ராஜ பக்ஷேவுக்கு எதிரணியில் !

இந்திய பாராளுமன்றத் தேர்தல் :

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் , இந்தியாவில் நடை பெற்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் , உலகம் முழுவதும் கவனிக்கப் பட்ட ஒன்றாகும். நூற்றி சொச்சம் கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தில் , அனைத்து ஒட்டு சாவடிகளிலும், மின்னணு சாதனங்களைப் பயன் படுத்தி ஓட்டுப் பதிவு நடத்தியதை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு , நான்காவது , ஐந்தாவது அணிகள் உண்டான தேர்தல் இது ! கடைசியில் , டாக்டர்.மன்மோகன் சிங் ( சோனியா !?) மகத்தான வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் முதல் மரியாதை பெற்ற தி.மு.க விற்கு , இந்த முறை பந்திக்கு கூட அழைப்பில்லை. தேர்தல் சமயத்தில் , இலங்கை தமிழர் பிரச்சனை , சுவிஸ் வங்கி கருப்பு பணம் போன்றவை விஸ்வ ரூபம் எடுத்து , பிறகு புஸ்வாணமாகி போயின !

வை . எஸ் . ராஜ சேகர ரெட்டி :

இந்த ஆண்டில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வுகளில் முக்கியமானது , திரு . ராஜசேகர ரெட்டின் மறைவு . கர்னூல் மாவட்டத்திற்கு திடீர் ஆய்வு செய்ய கிளம்பியவர் , போய் சேர வேண்டிய நேரம் ஆகியும் , போய் சேராதது , பரபரப்பின் ஆரம்பம். முதலில் ஹெலிகாப்டர் காணவில்லை என்றார்கள். தேடுதல் பணியில், இதுவரை இந்தியா பார்த்திராத அளவிற்கு உபகரணங்களும், ஆட்களும் பயன் படுத்தப் பட்டன. ஒருவேளை நக்சலைட்டுகளின் சதியாக இருக்கலாமோ என்று வலுத்த சந்தேகம், இரண்டு நாட்கள் தேடுதலின் முடிவில் ரெட்டியின் (மற்றும் அவர் உதவியாளர்களின் ) உடல் பாகங்களை நல்லமல்லா காட்டுப் பகுதயில் கண்டெடுத்த பின் ஓய்ந்தது. ரெட்டியின் இறப்பைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டது . ஆந்திர காங்கிரசுக்கு மட்டுமல்ல , தேசிய காங்கிரசுக்கே ஒரு பேரிழப்பாக இருக்கும் இந்த மறைவு .

தனித் தெலுங்கானா :

இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் , தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி யின் தலைவர் சந்திர சேகர ராவ் , ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா என்று தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கூறி , உண்ணாவிரதம் ஆரம்பித்தார். வழக்கம் போல் மீடியாகளின் உதவியுடன் உண்ணாவிரதம் பெரிதாக்கப் பட்டு , மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது ! கிட்டத் தட்ட இருநூறு பேருந்துகள் நாசம் செய்யப் பட்டன. பத்து நாட்கள் முடிவதற்குள்ளாக, ராவிற்கு ஆதரவாக தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை இருபதை எட்டியது என்று செய்தி. கடைசியில், ஆந்திராவை பிரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது மத்திய அரசு. இதைக் காரணம் காட்டி , இன்னும் ஒன்பது புது மாநிலக் கோரிக்கைகள் புத்துயிர் ஊட்டப் பட்டுள்ளன. இது போன்ற உண்ணாவிரதங்களுக்கு பயந்து மாநிலங்கள் பிரிக்கப் பட்டால் , இந்திய மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை , ஐம்பதைத் தொட்டு விடும். இந்த இடத்தில் , உங்களுக்கு ஒரு பொது அறிவுக் கேள்வி ! தற்போது இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள் எத்தனை ? ( தெலுங்கானாவைக் கணக்கில் கொள்ளாமல் ! )


மர்மக் காய்ச்சல்...




ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. ' மர்மக் காய்ச்சல் ' ஆல் பாதிக்கப் பட்டு, கிட்டத் தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு புதிய பதிவு போடலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன்.

அதுக்கு முன்னாடி , மர்மக் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் விளைவுகளைப் பற்றி சொல்லி விடுவது உத்தமம் என்று நினைக்கிறேன். முதல் நாள் காலையில் - ஒரு கால் முட்டியில், வலி ஆரம்பிச்சது. அன்னைக்கு மதியம் - லேசான காய்ச்சல் , சாயந்தரம் - ஜாயின்ட் பெயின் என்று , ஒரே நாளில் ' மர்மம் ' பரவ ஆரம்பிச்சுடிச்சு.

மாலையில் ஆபீஸ் முடிந்து வரும் வழியில் , ஒரு டாக்டரைப் பார்த்தேன். அநேகமாக வைரஸ் காய்ச்சலாக இருக்கும் என்றார். ( நல்ல வேளை , ' எதையும் இருபத்தி நான்கு மணி நேரம் கழித்துதான் சொல்ல முடியும் ' என்று கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு சொல்லவில்லை. ஏனென்றால் , அவர் கண்ணாடி போடவில்லை ! )

ஒரு வாரம் ஆகியும் மர்மக் காய்ச்சலின் பாதிப்புகள் குறைந்த பாடில்லை. இன்னும் முட்டிகளில் வலியும் லேசான தலை வலியும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது கொசுவின் மூலமாகப் பரவக் கூடியதுதான் என்றும் சொல்கிறார்கள். ஆகவே மக்களே, கொசுவிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அல்லது ரெண்டு , மூணு நாட்கள் ஆபிஸிற்கு லீவு போட வேண்டியிருக்கும் ! ஆபீசிலும் ஒருத்தருக்கு இதே போன்று காய்ச்சல் வந்திருந்தது.

மேலும் நான் பாதிக்கப் பட்டிருந்த நாள் முதலே, வீட்டிலும் இரண்டு பேருக்கு வந்துவிட்டிருந்தது. மருத்துவர்களும் முன்பு போல் இப்பொழுது இல்லை , நம்மை வைத்துதான் சோதனை செய்து கொள்கிறார்கள். ஒருவேளை இப்படி இருக்குமோ - ஒருவேளை அப்படி இருக்குமோ என்று !

இப்படியாக மர்மம் பரவிக் கொண்டிருக்கும் போதே, தொலைக் காட்சிகளில் சேதி வாசிக்கிறார்கள் - ' மர்மக் காய்ச்சலுக்கு சென்னையில் ஐந்து வயது சிறுமி பலி ' என்று. இன்னமும் பன்றிக் காய்ச்சல் பீதியும் குறைந்த பாடில்லை. சிக்குன் குனியாவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது . ஆகவே , டேக் கேர் . உங்களுக்காக இல்லாவிட்டாலும் , உங்களை நம்பி இருக்கும் ஜீவன்களுக்காகவாவது .

Sunday, November 29, 2009

ருத்ரம்...





இன்று அடையாறு கணபதிராம் தியேட்டரில் ' ருத்ரம் ' படம் பார்க்க போயிருந்தேன். ரெண்டே முக்கா மணி ஷோவுக்கு , ஒண்ணே முக்காவுக்கே போயாச்சு . படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் ஆகியும் கூட்டம் கொறஞ்சபாடில்ல. ஆனாலும், ' நாமதான் சீக்கிரம் போய்ட்டோமே ' ன்னு நாப்பது ரூபா கியூவில நின்னேன். (பால்கனி டிக்கெட் ஐம்பது ரூபா) . கடைசியில நாற்பது ரூபா டிக்கெட் நாப்பத்தஞ்சு ரூபாக்கு குடுத்தாங்க. அதிலயும் அஞ்சு ரூபா மீதி சில்லறை இல்லன்டானுங்க.

நானெல்லாம் பஸ்ல ஐம்பது காசு மீதி குடுக்கலன்னாவே , கண்டக்டர்கிட்ட கேட்டு வாங்கற ஆளு. ஆனா இங்க என்னடான்னா , அஞ்சு ரூபாவ ஆட்டயப் போட்ட ஒடனே எனக்குள்ள இருக்குற ' அந்நியன் ' , முழிச்சுக்கப் பார்த்தான். ஆனா, படம் போட்டாச்சுனு தெரிஞ்சதும் , அந்நியன் சகிதமா, அமைதியா , உள்ள என்டர்ஆயாச்சு.

சரி இந்த கதைய விடுங்க. நம்ம , ' ருத்ரம் ' பத்தி பாப்போம்.

படம் ஆரம்பிச்ச சில நிமிஷங்களிலேயே , படத்தின் பிரம்மாண்டம் தியேட்டர் முழுவதும் வியாபிக்க ஆரம்பித்து விடுகிறது . படத்தின் கிராபிக்ஸ் கலைஞர்கள் ஒரு நிஜமான பூலோக பிரளத்தையே கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். படத்தின் நிஜமான கதாநாயகன் கிராபிக்ஸ் தான். மிரட்டி எடுக்கும் கோணங்களில் ஒளிப்பதிவும் பிரமாதம்.

ஆனால் கதாபாத்திரங்கள், தங்களுக்கு பின்னால் உலகமே அழிந்து கொண்டிருக்கும் போது , ஏதோ டிவி பார்ப்பது போன்று அதை பார்க்கிறார்கள் .

இப்படி ஒரு படம் , இந்தியத் திரை உலகில் எடுக்கப் படுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது (இப்போதைக்கு ! ) . ஆனால் நம்மவர்கள் ' டப்பிங் ' பேசிய விதம் , ஒரு தமிழ்ப் படம் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கிறது. படத்தில் ஆங்காங்கே நகைச்சுவைக்கும் இடமிருக்கிறது. தமிழில் வசன உபய தாரர் பாராட்டுக்குரியவர். சில சமயங்களில் அரங்கம் அதிரும் அளவிற்கு கைத் தட்டல்கள். முக்கியமாக இந்திய விஞ்ஞானி ஒருவரைப் பாராட்டும் போது ! சில இடங்களில் வசனமில்லாத போதும் கைதட்டல் பறக்கிறது.

படத்தில் உள்ளது போன்று இரண்டாயிரத்திப் பன்னிரெண்டில் உலகம் அழிகிறதோ இல்லையோ, ஒருவேளை அழிந்தால் இப்படி இருக்கலாமோ என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்குகின்றது. உலக வெப்பமயமாதலின் விளைவுகளில், மோசமானதாக இருக்கக் கூடிய பல இயற்கை சீற்றங்களை ஒன்றிணைத்து , படம் பண்ணியிருக்கிறார்கள்.

ருத்ரம் சொல்ல வரும் விஷயம் - ' உலகம் பத்ரம் ( பத்திரம் ) ' !


Saturday, November 21, 2009

இடைத் தேர்தல் 2009




தமிழ் நாட்டில் தற்போது காலியாக உள்ள திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டு சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடை பெறும் தேதியை,(டிசம்பர் பத்தொன்பது அன்று ஓட்டுப்பதிவு) தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

கடந்த முறை நடை பெற்ற ஐந்து சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணித்த அ.தி.மு. க , இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் என்று , அதன் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். ஆனால் அப்போது அதனுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் கம்யுனிஸ்டுகள் இன்று பிரிந்து விட்டன. ம.தி.மு.க மட்டும் கூட்டணியில் தொடர்கிறது (புயல் போயஸ் கார்டனிலேய மையம் கொண்டுள்ளது ! ) .

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஏன் இடைத் தேர்தல் நடக்கிறது ? வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் , இறந்து விட்டார். திருசெந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் , அ.தி.மு.வில் இருந்து விலகி தி.மு.க வில் சேர்ந்து விட்டார். ஆக, திருச்செந்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அனிதா வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி இருக்கும் பட்சத்தில், போட்டி கடுமையாக இருக்கும். ஏனென்றால் , தன்னுடைய செல்வாக்கை தி.மு.க தலைமைக்கு காட்ட வேண்டிய கட்டாயம் அனிதாவிற்கு இருக்கிறது. அதே நேரத்தில், " அனிதாவின் இழப்பு தங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல " என்று அ.தி.மு. வும் காட்டியாக வேண்டும் ! பொதுவாக இடைத் தேர்தல் என்றாலே மக்களுக்கு குஷி பிறக்கும். அதுவும் , " தென் மண்டலத்தில் " நடப்பதால் , மக்களின் ' குறைகள் ' தீர்க்கப்படும் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையில் - தோழர்கள், மருத்துவர் மற்றும் கேப்டன் ஆகியோர் என்ன செய்யப் போகிறார்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை. மருத்துவர் ஐயா அநேகமாக அறிவாலயம் சென்றுவிடுவார் போலிருக்கிறது. போகும் போது தோழர்களை கூட்டிகொண்டு போவாரா என்று தெரியவில்லை. நம்ம சிங்கம் ,கேப்டன் இந்த முறையும் சிங்கிலாகத்தான் நிற்பார் போலிருக்கிறது.

மொத்தத்தில் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதி மக்கள், வேட்பாளர்களின் ' அன்பினால் ', திக்கு முக்காடப் போவதென்னவோ உண்மை ! ஆடுகள் தான் பாவம்.

குறிப்பு : இது என்னுடைய முதல் அரசியல் பதிவாகும். அப்போ இந்த பதிவு எந்தவகையை சேர்ந்தது ? னு கேக்கறீங்களா ? இது இலக்கியப் பதிவாக்கும் ! :)

Saturday, November 14, 2009

கண்டேன் காதலை - கண்டேன் ...




இன்னைக்கு மதியம் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் ,' கண்டேன் காதலை ' படம் பார்த்தேன். நம்ம சின்னத் தளபதியோட படத்த இப்பதான் முதல் முறை தியேட்டரில் பார்க்கிறேன்.நம்ம பசங்க கொஞ்ச பேர் ஏற்கனவே படம் பாத்துட்டு, படம் மொக்கைனு சொன்னாங்க. இருந்தாலும், நாம ஏற்கனவே முடிவு பண்ணினதால, கெளம்பி போயாச்சு.

இந்த படத்தோட ஒரிஜினல் - ' ஜாப் வீ மெட் ' படத்த, இதுவரைக்கும் பாத்ததில்ல. அதனால எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் போனேன். என்னை பொறுத்த வரைக்கும் ஒரு படம் பார்க்க போறோம்னா , படத்தோட சென்சார் சர்டிபிகேட் போடறதுல இருந்து பார்க்கணும் னுதான் ஆசை.அப்படி பார்த்தாதான், முழு படமும் பார்த்த மாதிரி ஒரு ' பீலிங் '. ஆனால், இப்போதெல்லாம் , ' படம் பாத்தா போதும் ' ங்கற நிலைமைல இருக்கறதால, ஒரு அஞ்சு நிமிஷம் படம் ஓடின பிறகும் என்டர் ஆனேன்.

ஒரு லவ் பாயாக , சின்னத் தளபதி கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் ' பிசினஸ் மேக்னட் ' வேடத்தில் கண்ணை உறுத்துகிறார்.தமன்னா ஒரு அப்பாவி பெண்ணாக காட்டப் பட வேண்டும் என்பதற்காக, 'தொண தொண ' வென்று பேசிக் கொண்டே இருப்பதால், ஒரு அலுப்பு வருவது என்னவோ உண்மை. நம்ம சந்தானம், வழக்கம் போல் சந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் லந்து கூட்டி கலக்கியிருக்கிறார்.

ரொம்ப நாள் கழிச்சு வித்யா சாகர் மியூசிக்ல ஒரு படம் பார்த்தேன். பாடல்களில் ' மக்கா மக்கா ', ' ஓடோடி போறேன் ' போன்றவை அக்மார்க் வித்யா சாகர் ராகங்கள். ஒளிப் பதிவும் அருமை.

படத்தை ' சன் பிக்சர்ஸ் ' வாங்கியிருப்பதால் , எப்படியும் ' ஹிட் ' ஆக்கி விடுவார்கள். ஏன்னா , ' திண்டுக்கல் சாரதி ' யவே சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை அவர்களுக்குண்டு. ஆனால், ஒரு ஹிட் படத்திற்கு உரிய அத்தனை அம்சங்களும், 'கண்டேன் காதலை ' க்கும் உண்டு.

கண்டேன் காதலை - காணலாம் ஒருமுறை !


Wednesday, November 11, 2009

ஒரு ஆட்டோ கிராப்...




கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி வரை போயிருந்தேன்.என்னுடன் பனிரெண்டு வருடம் கூட படித்தவனுடைய ( !) அண்ணனுக்கு கல்யாணம் என்றால் போகாமல் இருக்க முடியுமா ?

முதலில் என்னுடன், நண்பனுடன் வேலை செய்யும் இருவர் வருவதாக இருந்தது.இருவரும் தெலுங்குக் காரர்கள்.தமிழ் பேசத் தெரியாது. மழை காரணமாக ஒருவர் வரமுடியவில்லை(தப்பித்தார் !) .

வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்த மழை சனிக்கிழைமை நாங்கள் ரயில் ஏறும் வரையிலும் குறையாமல் பெய்து கொண்டிருந்தது.இருந்தாலும் மழையின் மீது துளி வெறுப்பும் வரவில்லை.மாறாக மழையில் நனைவதை மனம் விரும்பத்தான் செய்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் மழையில் நனைபவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. யாருக்குமே மழையில் நனைய விருப்பம் இருப்பதில்லையா என்ன? நனைந்தால் உடல் நலம் பாதிக்கும் என்ற பயம்தான் காரணம் போலும் !

சென்னை முதல் ஆம்பூர் வரை ரயில், பின்பு அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை பேருந்து பயணம். நேரமாகிக் கொண்டே போனதால் உட்கார இடமில்லையென்றாலும், ஏறி ஒருவழியாக எழு மணி ரிசப்சனுக்கு( இந்திய நேரப்படி !)எட்டு மணிக்கு போய்சேர்ந்தோம்.

வீட்டிற்கு தொலை பேசிய போது அன்று இரவு வரை சென்னையில் மழை பெய்ததாக சொன்னார்கள்.

எனது பால்யத்தின் சுவடுகள் இந்த ஊரில்தான் பதிந்திருக்கின்றன.இதை எனது சொந்த ஊர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒருவருக்கு சொந்த வீடு இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா ? அல்லது சொந்த பந்தங்கள் இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா? என்றால் இந்த இரண்டுமே எனக்கு இங்கு இல்லை. இருந்தாலும் யாரவது என்னிடம் ' உங்க சொந்த ஊர் எது ? ' என்று கேட்கும் போது, முதலில் என் ஞாபகத்திற்கு வருவது , கிருஷ்ணகிரி தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்து நண்பர்களை சந்திக்கும் ஆவலுடன் தான் எனது இந்த பயணம் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இருபது பேர் வந்தார்கள். ரெண்டு பேர் மிலிடரி, ரெண்டு பேர் டாக்டர், ரெண்டு பேர் சுயதொழில் என்று ஆளாளுக்கு ஒரு வேலையில் இருக்கிறார்கள். கொஞ்ச பேர் தந்தையாகி இருந்தார்கள்.அந்த ஊரிலேயே வேலை பார்ப்பவர்களை பார்த்து கொஞ்சம் பொறாமையும் வந்தது !

திருமணம் முடிந்து மதியம் லன்ச் ஐயும் முடித்துக் கொண்டு , பேருந்திலேயே கிளம்பி மீண்டும் சென்னை வந்து சேர்ந்தோம்.வந்தவுடன் மழை மீண்டும் பொழிய ஆரம்பித்திருந்தது.



Friday, November 6, 2009

மும்பை வீரன்தானே... அவன 'அடிக்க' விட்டே 'வீணே ( ! )' ...






இன்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. எழு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இது வரை நடந்த நான்கு போட்டிகளில் ரெண்டுக்கு ரெண்டு என்று ரெண்டு பேரும் சரி சமமான நிலையில் இருந்தனர்.


இருபது ஓவர் போட்டி வந்தவுடன்,இப்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகள் மிகவும் நீளமானதாக தோன்றுகின்றன. அவர்கள் முன்னூத்தி ஐம்பது ரன்கள் எடுத்தவுடனே , போட்டியின் முடிவை அனைவரும் கணித்திருப்பார்கள், என்னைப் போலவே. நம்ப ஆளுங்க என்னிக்கு முன்னூத்தி ஐம்பது ரன்களை சேஸ் பண்றது ? ன்னு அவனவன் வேலையை பாக்க போய்ருவாங்கன்னு பாத்தா , நம்ம அண்ணாத்த சச்சின் விட மாட்டேன்கிறாரே ?!

வயசு முப்பத்தி ஆறு ஆனாலும் அடி ஒவ்வொன்னும் சும்மா இடி மாதிரியில்ல இருந்துச்சு ? ரொம்ப நாள் கழிச்சி இப்படி ஒரு ஆட்டம் சச்சின் கிட்ட இருந்து.
ஆனாலும் நம்ம கணிப்பு படி ( ! ) 'சேசிங்க்ல சச்சின் நூறுக்கு மேல போன இந்தியா தோத்துடும்' ங்கறது சரியாதான் இருக்கும் போல !

நாம என்னதான் இங்கன உக்காந்துக்கிட்டு 'டோனி அஞ்சாவது டவுன் இறங்கியிருக்கணும்','சச்சின் ஒன்னாவது டவுன் இறங்கியிருக்கணும்','ஹர்பஜனுக்கு முன்னாடி ஜடேஜா இறங்கியிருக்கணும் ', னு சொல்லிரலாம் னாலும் ,அண்ணன் தோனிக்கு தெரியாததா நமக்கு தெரிஞ்சுடப் போகுது ?

எது எப்படியோ சச்சின் எழு ரன் எடுத்தாப் போதும்ன்னு நெனச்ச நேரத்துல, நூத்தி எழுபத்தஞ்சு அடிச்சது என்னவோ சந்தோசந்தான். ஒவ்வொரு விக்கெட்டுமே ஆட்டத்தின் திருப்பு முனைதான்.கடைசி நேரத்துல பிரவீன் குமார் கொஞ்சூண்டு நம்பிக்கை கொடுத்தார். .ஆனாலும் மேட்ச் வின் பண்ணியிருக்கலாம்.

என்னோட ஞானக் கண் பார்வையை பொறுத்த வரைக்கும், 'என்ன நடக்கும் ?' அப்படின்னா , அடுத்த மேட்ச் இந்தியா வெற்றி பெறும். கடைசி மேட்ச் தான் தொடரை யார் வெல்லப் போறாங்கன்னு முடிவு பண்ணும்.


Sunday, November 1, 2009

ஆதவன்





போன வாரம் நண்பனோட அக்கா கல்யாணத்துக்காக மேலூர் வரைக்கும் போயிருந்தேன்.போன எடத்துல கைய கால வெச்சிக்கிட்டு சும்மா இருந்தாதானே ?! பசங்க கூப்டாங்கன்னு 'ஆதவன்' படம் பாக்கலாமுன்னு போனேனுங்க.

என்னுடைய கொள்கைப் ( ! ) படி, படத்தோட கதைய கேக்காமதான் போனேன்.
இருந்தாலும் நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா? ' படம் செம மொக்க டா ' ன்னு (நம்மள விடவா ?!) சொல்லியும் கேக்காம போனேன்.போனதே பத்து நிமிஷம் லேட். என் நேரம் பார்த்து சூர்யாவ சேஸ் பண்ற சீன்ல இருந்துதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா சொல்லக்கூடாதுங்க , மனுஷன் என்னமா பறந்து பறந்து எஸ்கேப் ஆகறார் தெரியுமா? நம்ம சிலந்திப் பயபுள்ளயவே (அட ... ஸ்பைடர் மேன் தாங்க !) மிஞ்சிட்டார் போங்க.

படத்தின் முதல் பாதியில் வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில இடங்களில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வாராயோ , அசிலி பிசிலி, டமக்கு டமக்கு பாடல்கள் ஹாரிஸ் பெயரை பறை சாற்றுகின்றன. பின்னணி இசைக்கு அவ்வளவாக வேலை இருப்பதாக தெரிய வில்லை.

கேமரா வும் ஓகே.ஆனால் நயன் தாராவின் க்ளோசப் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோ ?

வழக்கம் போல (ஒவ்வொரு படத்திற்கும் ) சூர்யா நடிப்பில் ஒரு மெருகு கூடியிருக்கிறது.பிளாஷ் பேக்கில் வரும் பத்து வயது சூர்யா,முதலில் திரையை உறுத்தினாலும், பிறகு பழகி விடுகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் எதோ அவசரத்தில் படத்தை எடுத்தது போலிருக்கிறது.
(தரணி 'குருவி' யை எடுத்து போல்!). கதை ரமேஷ் கண்ணா வாமே?

ஆதவன் - லாஜிக் பார்க்கா - ஆதவன்.
ஆனால் பிளாப் - ஆகா - ஆதவன்.


Friday, October 30, 2009

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...




எனக்கு ஒரு பழக்கம் உண்டு , இலவச இணையமும் சிறிது நேரமும் கிடைத்தால், நான் எழுதிய படைப்புகளை நானே பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொள்வது . அது மாதிரி என்னுடைய முந்தைய பதிவான 'ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி ' என்றதை கூகிள் சர்ச் இல் போட்டு நம்ம ப்ளாக் ,
ரிசல்ட் ல வருதான்னு பாக்கலாமுன்னு ஒரு நப்பாசை (தப்பாசை ?).

அப்படி தேடி பார்த்தால் கிட்டத்தட்ட நானூறு ரிசல்டுகள் வந்தன .நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.அப்போது ஒரு முடிவு எடுத்தேன் . இனி புது பதிவு போடணும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வெட்டி, ஒட்டி, பதிவு போடக் கூடாது, அவசியத் தேவை இல்லாமல் !

(இதையே காரணமா வெச்சு ஒரு புது பதிவு போட்டாச்சு ! எப்படியெலாம் யோசிக்க வேண்டியிருக்கு ?!)

அப்படியே, புது பதிவே போடக் கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்னு நீங்க சொல்றது என்னோட ஞானக் கண்ணில் தெரிகிறது. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நான் ஒரு முறை முடிவு பண்ணிட்டேன் அப்டீன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!


Tuesday, October 27, 2009

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?



எனக்கு வந்த ஒரு மெயில் மேட்டர்.

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.
நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ
முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?


பின் குறிப்பு : இது கணிப் பொறி கனவான்கள் பற்றியது.
மற்ற துறைகளில் பிஸியாக (!) இருப்பவர்கள் , அது எப்பூடி ன்னு அனுப்புங்க, இல்லாட்டி பதிவு வெளியிட்டு லிங்க் போடுங்க .

Sunday, October 18, 2009

சொர்க்கமே என்றாலும்...

டிஸ்கி : இது போன தீபாவளிக்கு நான் எழுதிய இடுகை .
அப்போது பல திரட்டிகளில் இணைக்கவில்லை . இப்போது இணைக்கிறேன் !
(ஏதோ நானும் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற நினைப்பில்  எழுதிய இடுகை இது ! )



இந்த முறை தீபாவளி சென்னையில் தான்.
இதுதான் முதல் முறை கூட.

எனக்கு தெரிந்து பண்டிகைகளின் உண்மையான வாசத்தை கிராமங்களில் தான் நுகர முடிகிறது. பிழைப்பிற்காக சென்னை வந்த அனைவரும் இதை வழிமொழிவார்கள் என்றே எண்ணுகிறேன்.

இன்றும் சாதாரண விடுமுறை நாட்களை விட, பண்டிகை விடுமுறை நாட்களில் வெளியூர்ப் பேருந்துகளில் செல்வோரின் கூட்டம் சற்றே அதிகமாக இருக்கிறதைப் பார்க்க முடிகிறது. (மற்ற எந்த நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்ல விரும்பாதவர்களும் இது போன்ற பண்டிகைகளுக்கும், திருவிழாக்களுக்கும் ஊர் செல்ல விரும்புகின்றனர் ?)

இதை எப்படி எடுத்துக் கொள்வது?
இவ்வாறானவர்களை அவர்களின் ஊர் அழைக்கிறதா? அல்லது சென்னை அவர்களை விரும்புவதில்லையா?அல்லது அவர்கள் சென்னையை விரும்புவதில்லையா? என்றால் இத்தனை நாள் எப்படி அவர்கள் இங்கிருந்தார்கள்?

மாநகரமானது , மனிதர்களை மாற்றிவிடுவது போல, பண்டிகைகளையும் மாற்றி விடுகிறது போலும் ! அல்லது மனிதர்கள் இடத்திற்கு இடம் மாறுவதைப் போல,பண்டிகைகளும் தன் இயல்பை மாற்றிக் கொள்கின்றன !

நான் பால்யத்தில் கண்ட தீபாவளிக்கும் , இப்போது காணும் தீபாவளிக்கும் உள்ள வித்தியாசங்கள் மிக அதிகம்.அன்று புதுத் துணிக்கும், பட்டாசுக்கும் , இனிப்பு,காரங்களுக்கும் ஏங்கிய மனது இன்று அவற்றை ஏற்க மறுக்கிறது, அல்லது கூச்சம் கொள்கிறது.என்றால் , வயதுதான் பண்டிகைக் கொண்டாட்டங்களை தீர்மானிக்கிறதா? ஆனால், இன்றும் நாற்பது ஐம்பது வயதுகளிலும் புதுத் துணியுடன் பட்டாசு வெடிப்பவர்களை காண முடிகிறதே?
அவர்கள் ஏன் கூச்சம் கொள்வதில்லை? (ஏன் கூச்சம் கொள்ள வேண்டும் ?) .
அவர்கள் இன்னும் பால்யத்தின் கரைகளில் இருந்து வெளிவர விருப்பமற்றவர்களா?

ஒவ்வொருவருள்ளும் பால்யமானது தனது இருத்தலை பண்டிகைகள் மூலம் வெளிப்படுத்த முயன்று கொண்டுதானிருக்கிறது .வெகு சிலரே அதை அனுமதிக்கிறார்கள். பண்டிகை முடிந்தவுடன், அவர்கள் மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்புவது போலவே, தம் வயதிற்கும் திரும்புகின்றனர்.


அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !







Wednesday, October 7, 2009

திரு திரு ... துறு துறு...



நானும் நண்பனும் ,சென்ற வாரம் ஞாயிற்று கிழமை,
" திரு திரு ... துறு துறு..." படம் பார்த்தோம் .

வழக்கமாக ஒரு படம் பார்ப்பதற்கு முன்பு அந்த படத்தின் விமர்சனத்தை படிப்பதில்லை என்ற கொள்கை (?!) கொண்டவன் நான்.ஆனால் இந்த வாரம் விகடனில் விமர்சனத்தை எதேர்ச்சையாக படித்த பின்பும், படம் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

படத்தின் பெயர் போடுவதில் இருந்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள்.
ஒரு விளம்பர கம்பெனி.ஹீரோ (அஜ்மல்) வும் , ஹீரோயினும் (பேர் என்ன?) அதில் வேலை பார்க்கிறார்கள்.ஒரு , பேபி ப்ரொடக்ட் க்கு விளம்பரம் செய்ய , ஒரு கொழு கொழு குழந்தையை அஜ்மல் கொண்டு வர , அது திருட்டு குழந்தையாக இருக்க,அதனால் ஏற்படும் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார்கள்.

மௌலி தன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.அஜ்மல்
இனி இளம் ஹீரோக்களில் முக்கியமானவர் ஆகிவிடுவார்.
ஹீரோயின் ஒரு நல்ல கண்டுபிடிப்பு.
பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் ஈர்க்கிறார் மணி சர்மா.

நந்தினி அறிமுக இயக்குனராக ஒரு அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்.


திரு திரு ... துறு துறு...
விறு விறு ... சுறு சுறு...

(அப்பாடா... ஒரு வழியா எதுகை மோனையோட முடிச்சாச்சு !)

Saturday, September 26, 2009

எத்தனை நாளாச்சு...?




எத்தனை
நாளைக்குத்தான் தியரி மட்டும் எழுதுறது...?
சும்மா ஒரு தடவ, போயம் - உம் ட்ரை பண்ணலாம் என்ற நப்பாசையில் இந்த பதிவு.
அதாங்க - கவிதை எழுதி பாக்கலாமுன்னு... (என்ன கொடும சரவணன் இது..?)

முன் குறிப்பு : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் இந்த கவிதையை படிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


எத்தனை நாளாச்சு ..? (தலைப்பாமாம்.!)
-----------------------------------------------

எத்தனை நாளாச்சு...?
சைக்கிள் ஓட்டி..

எத்தனை நாளாச்சு ...?
மாலை மழையில் நனைந்து...

எத்தனை நாளாச்சு ...?
வானவில் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
அண்ணாந்து விமானம் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வீட்டில் லாந்தர் ஏத்தி...

எத்தனை நாளாச்சு...?
ஒலியும் ஒளியும் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வானொலி செய்தி கேட்டு...

எத்தனை நாளாச்சு...?
சென்னைக்கு வந்து...

(இன்னும் என்ன எதிர் பார்க்கறீங்க..? அவ்ளோதான்,கவிதை முடிஞ்சது !
ஒரு ஊர்ல ஒரு நரி , இதோட கவிதை சரி. )

பின் குறிப்பு: பின் குறிப்பு வரை படித்த தைரிய சாலிகளுக்கு ஒரு சவால்.முடிந்தால் இன்னொரு தடவை இந்த கவிதையை(!) படிக்கவும்.

Wednesday, September 16, 2009

கலைஞர்-க்கு அண்ணா விருது





கடந்த சனிக் கிழமையன்று நானும் என் நண்பனும் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தோம் . முதலமைச்சர் கலைஞர், அண்ணா விருது பெற்றதை அடுத்து அதற்கு காரணம் என்ன என்று ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள்.

கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதால் என்று தென்னவனும்,
ஏழைகளுக்கு உதவுவதால் என்று அமைச்சர் பொன்முடியும்,
பேச்சாற்றலால் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும்,
எழுத்தாற்றலால் என்று கவிபேரரசு வைரமுத்துவும்,
பகுத்தறிவுதான் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசாவும்,
இன்னுமோர் தலைப்பில் சுப.வீரபாண்டியனும் பேசினார்கள்.


கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.
இந்த கருத்தரங்கத்திற்கு கவிஞர் வாலி நடுவராக இருந்தார்.
இந்த வயதிலும் வாலியின் கவிதை வரிகள் வசீகரிக்கவே செய்கின்றன.

அவர் சொன்ன கவிதையில் இருந்து சில வரிகள்.

...
கலைஞர் -க்கு அண்ணா விருது.
அண்ணாவுக்கு..? கலைஞரே விருது !

வந்தவர்களுக்கெல்லாம் வாரி கொடுப்பதால் இது கொடை நாடு.
கொட நாடு ? (சில நொடிகள் மௌனம்....)
கொட நாடு .... அது கொடா நாடு !
......



எல்லாம் சரி ....
கருத்தரங்கத்தின் ஆறு தலைப்புகளோடு இன்னும் சிலவற்றை சேர்த்திருக்கலாம்
என்றெனக்கு தோன்றியது.

விருது கொடுப்பது தி . மு . க என்பதால்,
தி . மு . க விற்கு தலைவர் கலைஞர் என்பதால்...


Friday, September 11, 2009

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில்.



இன்று தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.
ஏன் ?சொன்னால் நம்ப மாட்டீர்கள்

(அப்புறம் எதுக்கு சொல்றன்னு கேக்கறீங்களா . வேற என்ன பண்றது. ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சி . எதையாச்சி எழுத வேணாமா? .ஒரு போஸ்ட்க்கு டாபிக் கெடைக்கறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி பாத்தாதான் தெரியும் !)

இன்றுதான் அரசி (செல்வியின் இரண்டாம் பாகம்) மெகாத் தொடர் முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக சுபம் போட்டார்கள் (இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் சுபம்).வரும் திங்கட் கிழமை முதல் அடுத்த அபத்தம் ஆரம்பம். செல்லமே என்ற புதிய மெகாத் தொடர் போடப் போகிறார்கள்.

அதிலும் ராதிகா வுக்கு தொல்லை கொடுப்பதேற்கே யாராவது வில்லன்களும், பாழாய்ப்போன விதியும் வரும். அதையெல்லாம் பல வருடங்களில் எப்படி தாண்டி வருகிறார் என்பதுதான் கதையாக (!) இருக்கும்.

அதெப்படி இவ்ளோ கரெக்டா சொல்றேன்னு பாக்கறீங்களா?
சற்றேறக்குறைய எல்ல தமிழ் மெகாத் தொடர்களிலும் இதுதான் கதையாகக் கொள்ளப் படுகிறது.இப்போது இந்த மாதிரியான தொடர்களிலும் சண்டை,பாட்டு எல்லாம் போடுகிறார்கள்.

இந்த வகையில் விஜய் டிவியும் மக்கள் டிவி, சாரி மக்கள் தொலைக்காட்சியும் கொஞ்சம் பரவாயில்லை.


Friday, August 28, 2009

இருள் ...





(இந்த பதிவை ஏற்கனவே வேறு எங்கேனும் படித்த ஞாபகம் இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
நான் படித்த படைப்புகளின் பாதிப்புகள் ( !? ) இருக்கக்கூடும் .)

இருளானது தண்ணீரைப்போல் தனது இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடியது.

பால்யத்தின் மாலை நேர இருள் கூடி விளையாடவும் , மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் இருந்திருக்கிறது.பதின் பருவ , மின்சாரமில்லா முன்னிரவின் இருள் பயம் மிகுந்ததாக இருந்திருக்கிறது.அது கையில் ரேகை படர்ந்திருப்பதைப் போல பயத்தை ஊரங்கும் படரவிடக் கூடியது.கல்லூரிக் கால பின்னிரவுகளின் இருள் அரட்டைகளுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது.

இருளானது சோகம், சந்தோசம், நட்பு, துரோகம், காதல், மோதல், அன்பு, ஆக்ரோஷம் அனைத்தையும் இரட்டிப்பாகக் கூடியது. இருள், உணவுகளின் சுவையை மாற்றக் கூடியது, மனிதர்களையும் கூடத்தான் இல்லையா?

மாநகர வாழ்க்கையின் எமெர்ஜென்சி விளக்குகளில் நாம் இருளை இழந்து கொண்டிருக்கிறோம். இப்போதைய மாநகர குழந்தைகள் இருளுக்கும் இயற்கைக்கும் அந்நியர்கள்.

எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு படைப்பில் படித்துதான் ஞாபகம் வருகிறது .
ஒரு மாநகர் வாழ் குழந்தை கழுதை - யையே நேரில் பார்த்ததில்லை என்றும் அதனை பார்ப்பதற்காக அந்த குழந்தையும் அதன் தந்தையும் வெகு தூரம் தேடி அலைவதாகவும் நீள்கிறது அந்த கதை.

ஆம், நம்மில் எத்தனை பேர் சென்னையில் கழுதைகளை (நான் சொல்வது நான்கு கால் கழுதைகளை ) பார்த்திருக்கிறோம்?


Saturday, August 15, 2009

சுதந்திர தினம்.





கிட்டத் தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின விழா ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த சுதந்திர தினத்தன்று கிடைத்தது.கடைசியாக பத்தாம் வகுப்பு படிக்கும் போது கலந்துகொண்டது.

தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வதும் இதுதான் முதல் முறை. விழாவிற்கு வந்தவர்களில் பலரது நோக்கமே கொடியற்றத் தில் இல்லாமல் வி பி க்களை பார்ப்பதில் தான் இருந்தது.(நானும் எனது நண்பனும் கூட அதற்குத்தான் போயிருந்தோம்!)

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் காம்பியரிங் (இதற்கு தமிழில் என்ன வார்த்தை உபயோகிப்பது?) கேட்ட திருப்தி.அதிலும் ஒவ்வொரு வாக்கியத்திற்க்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தார்கள்(என்னுடன் வந்த நண்பன் மேஜர் சுந்தர் ராஜனை ஞாபகப்படுத்தினான்.)

முதல்வர் உரையில் அவர் ஆட்சியின் சாதனைகளே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன.இறுதியில் அனைவருக்கும் சங்கீதா ஹோட்டலில் இருந்து சிற்றுண்டி கொடுத்தார்கள்.எப்படியும் 30 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும்.

குடியரசு தினத்தன்று வந்த கூட்டத்தில் பாதி கூட இருக்காது.
வந்தவர்களில் பெரும்பாலோனோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள் போலும்.போன வாரம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.(பில்ட் அப் கே வா?)


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...