கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம், அடையார் கணபதி ராம் தியேட்டரில், "ரெட்டைச் சுழி " திரைப்படம் பார்த்தேன். கல்லூரி நண்பனும், பள்ளிக்கூட நண்பனும் உடன் வந்திருந்தார்கள். கூட்டம் மிகவும் குறைவுதான் ! எந்த வித அலுப்புமின்றி டிக்கெட் கிடைத்து சுமூகமாக உள்ளே சென்று அமர்ந்தோம். மொத்தமாக ஒரு 200 பேர்தான் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 45 ரூபாய் டிக்கெட்.
ரொம்ப நாட்களுக்கு முன்னாடி , விகடனில், ரெட்டைச் சுழி பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். நான் இதற்கு முன்னாடி தாமிரா என்ற பெயரை கேள்வி கூட பட்டதில்லை. இப்போதுதான் அவர் பாலச்சந்தரின் சீடர் என்பது தெரியும். படத்திற்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு, இயக்குனர் சிகரமும் இயக்குனர் இமயமும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதுதான். கார்த்திக் ராஜாவின் இசைக்கு , பெரிய வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல இசைஅமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை ! விளம்பரமும் அதிகம் செய்யப்பட வில்லை!
இதுவரைக்குமே , பாலச்சந்தரும் பாரதிராஜாவும் பரம எதிரிகள் என்று ஒரு மாய பிம்பம் எனக்குள்ளே இருந்தது . சமீபத்திய FM நிகழ்ச்சியில் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் அந்த மாய பிம்பம் சுக்கு நூறாய் உடைந்தது ! அப்போதிருந்தே இந்த படத்திற்கான எனது எதிர்பார்ப்புகள் தொடங்கிவிட்டன ! தமிழ் சினிமாவின் இரு மாபெரும் சிற்பிகள் தானே இவர்கள் ?! படம் ஆரம்பம் முதலே இருவரும் சிறுபிள்ளைத் தனமாக மோதிக் கொள்கிறார்கள் ! ஒன்று, இவர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறார்கள் - அல்லது , உடன் இருக்கும் குழந்தைகள் பெரிய மனுசத் தனமாக நடந்து கொள்கிறார்கள் !
தென் மாவட்டங்களை சேர்ந்த குக்கிராமங்களில் கதை நடப்பதாக சொல்லப் பட்டாலும், அதற்கே உரிய வழக்கு மொழியை கையாளவில்லை என நினைக்கிறேன். ஒளிப்பதிவாளர் கிராமங்களை காட்சிப் படுத்திய விதம் அருமை! பாடல்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை என்றாலும், திரை அரங்கத்தில் கேட்கும் போது நன்றாகத் தான் இருந்தது. பின்னணி இசையை கவனமாகக் கோர்த்திருக்கிறார் கார்த்திக் ராஜா.குழந்தைகள் கதாப் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு சூப்பர் ! பால்யத்தின் குறும்புகளை கொஞ்சம் ஆங்கங்கே தெளித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் படத்தின் பல இடங்களில் தர்க்கக் குறைபாடுகள் (LOGICAL MISTAKES ) ! என்ன என்று படத்தில் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். திரைக்கதையில் , கொஞ்சம் இல்லை, நிறையவே கவனம் செலுத்துங்கள் தாமிரா சார் ! வசனங்கள் ஓகே.படத்தின் பல காட்சிகள், பாலச்சந்தரின் மீசை போல், ஒட்டாமலே வருகின்றன. ஆய்த எழுத்து பாரதிராஜாதான் இதிலும் நடித்திருக்கிறார் ! "அங்காடித் தெரு" அஞ்சலி , அதை அப்படியே 'மையின் டையின்' செய்திருக்கிறார் !
பல இடங்களில் 'பசங்க' திரைப்படத்தை ஞாபகப் படுத்துகிறார்கள்.
ரெட்டைச் சுழி - இயக்குனர் இமயத்திற்க்காகவும் இயக்குனர் சிகரத்திற்க்காகவும், சிரமம் பார்க்காமல் திரை அரங்கம் வரை போகலாம் !
ஒரு மொக்கை...
(நீ மேலே எழுதினதே மொக்கையாத்தான் இருந்ததுன்னு சொல்லப் படாது !)
IPL3 நடந்து கொண்டிருந்த போது, செஞ்சுரி அடித்த வீரர்களைப் பார்த்து ,அலுவலக நண்பன் சொன்னார் "இவனுங்க என்னா, வெறும் 100 தான் அடிக்கரானுங்க ?!, நான் 500 கூட அடிப்பேன்!"
நான் : "அவனுங்க மட்டையை வெச்சு 100 அடிக்கறானுங்க ! நீ 500 அடிச்சிட்டு 'மட்டை' யாயிடுவ "!
ஒரு அநியாயம்...
கணபதி ராம் தியேட்டரிலும் டூ வீலர் பார்க்கிங் 10 ரூபாய் ஆக்கி விட்டார்கள். ஒரு SHED கூட இல்லை!



