Wednesday, November 11, 2009

ஒரு ஆட்டோ கிராப்...




கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி வரை போயிருந்தேன்.என்னுடன் பனிரெண்டு வருடம் கூட படித்தவனுடைய ( !) அண்ணனுக்கு கல்யாணம் என்றால் போகாமல் இருக்க முடியுமா ?

முதலில் என்னுடன், நண்பனுடன் வேலை செய்யும் இருவர் வருவதாக இருந்தது.இருவரும் தெலுங்குக் காரர்கள்.தமிழ் பேசத் தெரியாது. மழை காரணமாக ஒருவர் வரமுடியவில்லை(தப்பித்தார் !) .

வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்த மழை சனிக்கிழைமை நாங்கள் ரயில் ஏறும் வரையிலும் குறையாமல் பெய்து கொண்டிருந்தது.இருந்தாலும் மழையின் மீது துளி வெறுப்பும் வரவில்லை.மாறாக மழையில் நனைவதை மனம் விரும்பத்தான் செய்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் மழையில் நனைபவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. யாருக்குமே மழையில் நனைய விருப்பம் இருப்பதில்லையா என்ன? நனைந்தால் உடல் நலம் பாதிக்கும் என்ற பயம்தான் காரணம் போலும் !

சென்னை முதல் ஆம்பூர் வரை ரயில், பின்பு அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை பேருந்து பயணம். நேரமாகிக் கொண்டே போனதால் உட்கார இடமில்லையென்றாலும், ஏறி ஒருவழியாக எழு மணி ரிசப்சனுக்கு( இந்திய நேரப்படி !)எட்டு மணிக்கு போய்சேர்ந்தோம்.

வீட்டிற்கு தொலை பேசிய போது அன்று இரவு வரை சென்னையில் மழை பெய்ததாக சொன்னார்கள்.

எனது பால்யத்தின் சுவடுகள் இந்த ஊரில்தான் பதிந்திருக்கின்றன.இதை எனது சொந்த ஊர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒருவருக்கு சொந்த வீடு இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா ? அல்லது சொந்த பந்தங்கள் இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா? என்றால் இந்த இரண்டுமே எனக்கு இங்கு இல்லை. இருந்தாலும் யாரவது என்னிடம் ' உங்க சொந்த ஊர் எது ? ' என்று கேட்கும் போது, முதலில் என் ஞாபகத்திற்கு வருவது , கிருஷ்ணகிரி தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்து நண்பர்களை சந்திக்கும் ஆவலுடன் தான் எனது இந்த பயணம் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இருபது பேர் வந்தார்கள். ரெண்டு பேர் மிலிடரி, ரெண்டு பேர் டாக்டர், ரெண்டு பேர் சுயதொழில் என்று ஆளாளுக்கு ஒரு வேலையில் இருக்கிறார்கள். கொஞ்ச பேர் தந்தையாகி இருந்தார்கள்.அந்த ஊரிலேயே வேலை பார்ப்பவர்களை பார்த்து கொஞ்சம் பொறாமையும் வந்தது !

திருமணம் முடிந்து மதியம் லன்ச் ஐயும் முடித்துக் கொண்டு , பேருந்திலேயே கிளம்பி மீண்டும் சென்னை வந்து சேர்ந்தோம்.வந்தவுடன் மழை மீண்டும் பொழிய ஆரம்பித்திருந்தது.



Friday, November 6, 2009

மும்பை வீரன்தானே... அவன 'அடிக்க' விட்டே 'வீணே ( ! )' ...






இன்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. எழு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இது வரை நடந்த நான்கு போட்டிகளில் ரெண்டுக்கு ரெண்டு என்று ரெண்டு பேரும் சரி சமமான நிலையில் இருந்தனர்.


இருபது ஓவர் போட்டி வந்தவுடன்,இப்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகள் மிகவும் நீளமானதாக தோன்றுகின்றன. அவர்கள் முன்னூத்தி ஐம்பது ரன்கள் எடுத்தவுடனே , போட்டியின் முடிவை அனைவரும் கணித்திருப்பார்கள், என்னைப் போலவே. நம்ப ஆளுங்க என்னிக்கு முன்னூத்தி ஐம்பது ரன்களை சேஸ் பண்றது ? ன்னு அவனவன் வேலையை பாக்க போய்ருவாங்கன்னு பாத்தா , நம்ம அண்ணாத்த சச்சின் விட மாட்டேன்கிறாரே ?!

வயசு முப்பத்தி ஆறு ஆனாலும் அடி ஒவ்வொன்னும் சும்மா இடி மாதிரியில்ல இருந்துச்சு ? ரொம்ப நாள் கழிச்சி இப்படி ஒரு ஆட்டம் சச்சின் கிட்ட இருந்து.
ஆனாலும் நம்ம கணிப்பு படி ( ! ) 'சேசிங்க்ல சச்சின் நூறுக்கு மேல போன இந்தியா தோத்துடும்' ங்கறது சரியாதான் இருக்கும் போல !

நாம என்னதான் இங்கன உக்காந்துக்கிட்டு 'டோனி அஞ்சாவது டவுன் இறங்கியிருக்கணும்','சச்சின் ஒன்னாவது டவுன் இறங்கியிருக்கணும்','ஹர்பஜனுக்கு முன்னாடி ஜடேஜா இறங்கியிருக்கணும் ', னு சொல்லிரலாம் னாலும் ,அண்ணன் தோனிக்கு தெரியாததா நமக்கு தெரிஞ்சுடப் போகுது ?

எது எப்படியோ சச்சின் எழு ரன் எடுத்தாப் போதும்ன்னு நெனச்ச நேரத்துல, நூத்தி எழுபத்தஞ்சு அடிச்சது என்னவோ சந்தோசந்தான். ஒவ்வொரு விக்கெட்டுமே ஆட்டத்தின் திருப்பு முனைதான்.கடைசி நேரத்துல பிரவீன் குமார் கொஞ்சூண்டு நம்பிக்கை கொடுத்தார். .ஆனாலும் மேட்ச் வின் பண்ணியிருக்கலாம்.

என்னோட ஞானக் கண் பார்வையை பொறுத்த வரைக்கும், 'என்ன நடக்கும் ?' அப்படின்னா , அடுத்த மேட்ச் இந்தியா வெற்றி பெறும். கடைசி மேட்ச் தான் தொடரை யார் வெல்லப் போறாங்கன்னு முடிவு பண்ணும்.


Sunday, November 1, 2009

ஆதவன்





போன வாரம் நண்பனோட அக்கா கல்யாணத்துக்காக மேலூர் வரைக்கும் போயிருந்தேன்.போன எடத்துல கைய கால வெச்சிக்கிட்டு சும்மா இருந்தாதானே ?! பசங்க கூப்டாங்கன்னு 'ஆதவன்' படம் பாக்கலாமுன்னு போனேனுங்க.

என்னுடைய கொள்கைப் ( ! ) படி, படத்தோட கதைய கேக்காமதான் போனேன்.
இருந்தாலும் நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா? ' படம் செம மொக்க டா ' ன்னு (நம்மள விடவா ?!) சொல்லியும் கேக்காம போனேன்.போனதே பத்து நிமிஷம் லேட். என் நேரம் பார்த்து சூர்யாவ சேஸ் பண்ற சீன்ல இருந்துதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா சொல்லக்கூடாதுங்க , மனுஷன் என்னமா பறந்து பறந்து எஸ்கேப் ஆகறார் தெரியுமா? நம்ம சிலந்திப் பயபுள்ளயவே (அட ... ஸ்பைடர் மேன் தாங்க !) மிஞ்சிட்டார் போங்க.

படத்தின் முதல் பாதியில் வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில இடங்களில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வாராயோ , அசிலி பிசிலி, டமக்கு டமக்கு பாடல்கள் ஹாரிஸ் பெயரை பறை சாற்றுகின்றன. பின்னணி இசைக்கு அவ்வளவாக வேலை இருப்பதாக தெரிய வில்லை.

கேமரா வும் ஓகே.ஆனால் நயன் தாராவின் க்ளோசப் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோ ?

வழக்கம் போல (ஒவ்வொரு படத்திற்கும் ) சூர்யா நடிப்பில் ஒரு மெருகு கூடியிருக்கிறது.பிளாஷ் பேக்கில் வரும் பத்து வயது சூர்யா,முதலில் திரையை உறுத்தினாலும், பிறகு பழகி விடுகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் எதோ அவசரத்தில் படத்தை எடுத்தது போலிருக்கிறது.
(தரணி 'குருவி' யை எடுத்து போல்!). கதை ரமேஷ் கண்ணா வாமே?

ஆதவன் - லாஜிக் பார்க்கா - ஆதவன்.
ஆனால் பிளாப் - ஆகா - ஆதவன்.


Friday, October 30, 2009

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...




எனக்கு ஒரு பழக்கம் உண்டு , இலவச இணையமும் சிறிது நேரமும் கிடைத்தால், நான் எழுதிய படைப்புகளை நானே பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொள்வது . அது மாதிரி என்னுடைய முந்தைய பதிவான 'ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி ' என்றதை கூகிள் சர்ச் இல் போட்டு நம்ம ப்ளாக் ,
ரிசல்ட் ல வருதான்னு பாக்கலாமுன்னு ஒரு நப்பாசை (தப்பாசை ?).

அப்படி தேடி பார்த்தால் கிட்டத்தட்ட நானூறு ரிசல்டுகள் வந்தன .நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.அப்போது ஒரு முடிவு எடுத்தேன் . இனி புது பதிவு போடணும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வெட்டி, ஒட்டி, பதிவு போடக் கூடாது, அவசியத் தேவை இல்லாமல் !

(இதையே காரணமா வெச்சு ஒரு புது பதிவு போட்டாச்சு ! எப்படியெலாம் யோசிக்க வேண்டியிருக்கு ?!)

அப்படியே, புது பதிவே போடக் கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்னு நீங்க சொல்றது என்னோட ஞானக் கண்ணில் தெரிகிறது. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நான் ஒரு முறை முடிவு பண்ணிட்டேன் அப்டீன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!


Tuesday, October 27, 2009

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?



எனக்கு வந்த ஒரு மெயில் மேட்டர்.

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.
நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ
முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?


பின் குறிப்பு : இது கணிப் பொறி கனவான்கள் பற்றியது.
மற்ற துறைகளில் பிஸியாக (!) இருப்பவர்கள் , அது எப்பூடி ன்னு அனுப்புங்க, இல்லாட்டி பதிவு வெளியிட்டு லிங்க் போடுங்க .

Sunday, October 18, 2009

சொர்க்கமே என்றாலும்...

டிஸ்கி : இது போன தீபாவளிக்கு நான் எழுதிய இடுகை .
அப்போது பல திரட்டிகளில் இணைக்கவில்லை . இப்போது இணைக்கிறேன் !
(ஏதோ நானும் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற நினைப்பில்  எழுதிய இடுகை இது ! )



இந்த முறை தீபாவளி சென்னையில் தான்.
இதுதான் முதல் முறை கூட.

எனக்கு தெரிந்து பண்டிகைகளின் உண்மையான வாசத்தை கிராமங்களில் தான் நுகர முடிகிறது. பிழைப்பிற்காக சென்னை வந்த அனைவரும் இதை வழிமொழிவார்கள் என்றே எண்ணுகிறேன்.

இன்றும் சாதாரண விடுமுறை நாட்களை விட, பண்டிகை விடுமுறை நாட்களில் வெளியூர்ப் பேருந்துகளில் செல்வோரின் கூட்டம் சற்றே அதிகமாக இருக்கிறதைப் பார்க்க முடிகிறது. (மற்ற எந்த நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்ல விரும்பாதவர்களும் இது போன்ற பண்டிகைகளுக்கும், திருவிழாக்களுக்கும் ஊர் செல்ல விரும்புகின்றனர் ?)

இதை எப்படி எடுத்துக் கொள்வது?
இவ்வாறானவர்களை அவர்களின் ஊர் அழைக்கிறதா? அல்லது சென்னை அவர்களை விரும்புவதில்லையா?அல்லது அவர்கள் சென்னையை விரும்புவதில்லையா? என்றால் இத்தனை நாள் எப்படி அவர்கள் இங்கிருந்தார்கள்?

மாநகரமானது , மனிதர்களை மாற்றிவிடுவது போல, பண்டிகைகளையும் மாற்றி விடுகிறது போலும் ! அல்லது மனிதர்கள் இடத்திற்கு இடம் மாறுவதைப் போல,பண்டிகைகளும் தன் இயல்பை மாற்றிக் கொள்கின்றன !

நான் பால்யத்தில் கண்ட தீபாவளிக்கும் , இப்போது காணும் தீபாவளிக்கும் உள்ள வித்தியாசங்கள் மிக அதிகம்.அன்று புதுத் துணிக்கும், பட்டாசுக்கும் , இனிப்பு,காரங்களுக்கும் ஏங்கிய மனது இன்று அவற்றை ஏற்க மறுக்கிறது, அல்லது கூச்சம் கொள்கிறது.என்றால் , வயதுதான் பண்டிகைக் கொண்டாட்டங்களை தீர்மானிக்கிறதா? ஆனால், இன்றும் நாற்பது ஐம்பது வயதுகளிலும் புதுத் துணியுடன் பட்டாசு வெடிப்பவர்களை காண முடிகிறதே?
அவர்கள் ஏன் கூச்சம் கொள்வதில்லை? (ஏன் கூச்சம் கொள்ள வேண்டும் ?) .
அவர்கள் இன்னும் பால்யத்தின் கரைகளில் இருந்து வெளிவர விருப்பமற்றவர்களா?

ஒவ்வொருவருள்ளும் பால்யமானது தனது இருத்தலை பண்டிகைகள் மூலம் வெளிப்படுத்த முயன்று கொண்டுதானிருக்கிறது .வெகு சிலரே அதை அனுமதிக்கிறார்கள். பண்டிகை முடிந்தவுடன், அவர்கள் மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்புவது போலவே, தம் வயதிற்கும் திரும்புகின்றனர்.


அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !







Wednesday, October 7, 2009

திரு திரு ... துறு துறு...



நானும் நண்பனும் ,சென்ற வாரம் ஞாயிற்று கிழமை,
" திரு திரு ... துறு துறு..." படம் பார்த்தோம் .

வழக்கமாக ஒரு படம் பார்ப்பதற்கு முன்பு அந்த படத்தின் விமர்சனத்தை படிப்பதில்லை என்ற கொள்கை (?!) கொண்டவன் நான்.ஆனால் இந்த வாரம் விகடனில் விமர்சனத்தை எதேர்ச்சையாக படித்த பின்பும், படம் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

படத்தின் பெயர் போடுவதில் இருந்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள்.
ஒரு விளம்பர கம்பெனி.ஹீரோ (அஜ்மல்) வும் , ஹீரோயினும் (பேர் என்ன?) அதில் வேலை பார்க்கிறார்கள்.ஒரு , பேபி ப்ரொடக்ட் க்கு விளம்பரம் செய்ய , ஒரு கொழு கொழு குழந்தையை அஜ்மல் கொண்டு வர , அது திருட்டு குழந்தையாக இருக்க,அதனால் ஏற்படும் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார்கள்.

மௌலி தன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.அஜ்மல்
இனி இளம் ஹீரோக்களில் முக்கியமானவர் ஆகிவிடுவார்.
ஹீரோயின் ஒரு நல்ல கண்டுபிடிப்பு.
பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் ஈர்க்கிறார் மணி சர்மா.

நந்தினி அறிமுக இயக்குனராக ஒரு அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்.


திரு திரு ... துறு துறு...
விறு விறு ... சுறு சுறு...

(அப்பாடா... ஒரு வழியா எதுகை மோனையோட முடிச்சாச்சு !)

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...