Saturday, August 28, 2010

நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?

ஹ்ம்ம்.... வாங்க... வாங்க... உங்களைதான் தேடிட்டு இருந்தேன்.
"நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?" ங்கற தலைப்பை பார்த்தவுடனே, "ஆஹா ! இதைத்தானே இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தேன் ?!" ன்னு சொல்றீங்களா ?! நீங்க சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க!

அ. நீங்கள் திருமணமான ஆணா ?
ஆ. நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறீர்களா ?

மேற்கண்ட மூன்று கேள்விகளில் எதாவது ஒன்றிற்கு உங்களுடைய பதில், "ஆம்" என்றால், மேலே படிங்க !

இது எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல்.கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி'  இருக்கிறேன். மின்னஞ்சலிய நண்பனுக்கும், இதன் உண்மையான 'ஓனருக்கும்' நன்றி.

பொது நலன் கருதி வெளியிடுவோர் : உங்கள் தேசாந்திரி - பழமை விரும்பி.

##########################################################################################

ஒரு ஊர்ல ஒரு வயசான தம்பதி இருந்தாங்க. அவங்களுக்கு  கல்யாணமாகி 65 வருசமாச்சு! ஆணா இதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒரு சின்ன சண்ட கூட போட்டதில்ல ! இதப் பார்த்து ஊர்ல இருக்க எல்லாரும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க !
உடனே, எல்லாருமா சேர்ந்து முடிவு பண்ணி அவங்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணாங்க. (ஆஹா, திரும்பவும் ஒரு பாராட்டு விழாவா ?!)

அந்த விழாவுல நெறைய பத்திரிக்கைக்காரங்களும்  கலந்துகிட்டாங்க. அதுல ஒருத்தர், ஆர்வம் தாங்காம , அந்த புருஷன் கிட்ட கேட்டாரு ,"அது எப்புடிங்க ?! 65  வருசத்துல ஒரு தடவ கூட சண்ட போடாம உங்களால இருக்க முடிஞ்சுது  ?!"



அதுக்கு அந்த கிழவர் சொன்னாராம்,

"தம்பி, எங்களுக்கு கல்யாணமான அடுத்த நாளே, நாங்க ஹனிமூனுக்கு மெட்ராஸ் வந்தோம், எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டு கடைசியா மெரீனா பீச்சுக்கு போனோம். அங்க குதிர சவாரி போகணும்னு அவ ஆசப் பட்டா. சரின்னு, அவ ஒரு குதிரையிலயும், நான் ஒரு குதிரையிலயும் சவாரி பண்ண ஆரம்பிச்சோம் !"

"ஹ்ம்ம்..."

"என் குதிரை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா , அவ வந்த குதிரை சரியாவே ஓடல. ஒரு முறை, அவள கீழ தள்ளி விட்டுடிச்சு. அவ, குதிரையை பார்த்து ஒச்சரிச்சா... ச்சி எச்சரிச்சா, 'இது உனக்கு முதல் தடவை...'  "

"ஹ்ம்ம்ம்..."

"திரும்பவும் மேல ஏறி, சவாரி பண்ண ஆரம்பிச்சா... ஆனா பாரு , அந்த குதிர ரெண்டாவது தடவையும் அவள கீழே தள்ளிடுச்சி ! கொஞ்சம் கோவமான எம்பொண்டாட்டி, குதிரையைப் பார்த்து சொன்னா, 'இது உனக்கு ரெண்டாவது தடவை !' "

"ஹ்ம்ம்ம்ம்..."

"ஆனா, அடுத்த வாட்டியும் அவளை கீழ தள்ளிடுச்சு அந்த குதிரை. உடனே, பக்கத்துல  இருந்த பெரிய பாறாங்கல்ல தூக்கி, அது மேல போட்டு , அந்த குதிரைய கொன்னே போட்டுட்டா..."

"ஹ்ம்ம்ம்ம்ம்..."

"உடனே நான் கேட்டேன், 'ஏண்டி, உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா ?! பாவம் அந்த வாயில்லா ஜீவனை இப்புடி கல்லத் தூக்கிப் போட்டு கொன்னுட்டியே ?!'"

"ஹ்ம்மம்ம்ம்ம்..."

"அதுக்கு அவ சொன்னா, 'யோவ், இது உனக்கு முதல் தடவை...' ! இப்போ தெரியுதா ?! நான் எப்புடி 65  வருஷம் ஓட்டினேன்னு ?!'"



##########################################################################################

சரி நீங்க கல்யாணமானவரா, இல்லையான்னு எப்புடி கண்டு பிடிக்கிறது ?
இடுகையோட ஆரம்பத்துல, மூணு கேள்வி கேட்டிருந்தேன்னு  சொன்னேன்  இல்ல ?!

இல்லை.

 உண்மையிலேயே ரெண்டு கேள்விதான் இருக்கு. இத நீங்க கண்டுக்காம படிச்சிருந்தா, உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுங்கறது கன்பார்ம்டு !


 புகைப்பட உதவி : http://acarelessdreamer.typepad.com/ , http://waltonportfolio.com

Saturday, July 31, 2010

உலகத் தமிழ்ப் பதிவர்கள் தினம் - தலைப்பில்லா இடுகைகள் 31 . 07 .2010

ஒரு அறிவிப்பு ...

அண்மைய செய்தி


கடந்த இரண்டு வாரங்களாக  காணாமல் போயிருந்த இந்த பிளாகின் 'மொதலாளி'  திரு.தேசாந்திரி - பழமை விரும்பி , இன்று பின்னூட்டம்போடும் போது கண்டுபிடிக்கப் பட்டார். அவரிடம் கைவசம் சரக்கு இல்லை என்பதால், இவ்வளவு நாட்களாக தலைமறைவாக இருந்ததாக எமது சிறப்பு செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், அவ்வப் போது , சரக்கு கிடைத்தால் மீண்டும் மொக்கை போட வருவார் என்று தெரிகிறது. ஆகவே , பொதுமக்கள் அனைவரும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

(டிஸ்கி - எனது வலைதளத்தின் நீண்ட கால (!) வாசக (!!)  நண்பர் ஒருவர், நான் அடிக்கடி பதிவு போடுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் ! அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செய்தி. (கோவிச்சுக்காதீங்க அருண் , சும்மா ஜாலிக்காகத்தான் ! )).இந்த இடுகை  மூலம் அந்த வாசக நண்பரை , சக பதிவராகும் படி கேட்டுக் 'கொல்'கிரேன்!
(நல்லா மாட்டிக்கிடீங்கள ?! இப்ப இன்னா பண்ணுவீங்க ?!)

புகைப்பட உதவி - www.bygonebutlins.com

ஒரு சுய தம்பட்டம்...

ஒரு நாள் கூகிளாரிடம் , தமிழ் வார்த்தைகளை சொல்லி தேடச் சொன்ன போதுதான் , வலையுலகம் என்று ஒன்று இருப்பதை எதேர்ச்சையாக அறிந்தேன். பிறகு, இளவஞ்சி,  வால்பையன் ஆகியோரது வலைத்தளங்களை வாசிக்கலானேன். இவர்களைப் பார்த்துதான், நானும் 'எழுத' ஆரம்பிதேன் ! ( அவங்களைச் சொல்லனும் !)


இன்றுடன் நான் வலையுலகிற்கு வந்து ஒருவருடம் ஆகிறது !!!

(யாருங்க அது, ஜூலை 31 - ஐ உலகத்  தமிழ்ப் பதிவர்கள் தினமாக்க வேண்டுமென்று சவுண்டு  விடுறது ?!)



கடந்த ஒருவருட காலமாக, மொத்தம் 60 இடுகைகள் இட்டிருக்கிறேன். அவற்றில் ஒரு மீள் இடுகை, இன்னொன்று வெட்டி , ஒட்டியது. சில, எனக்கு வந்த மின்னஞ்சல்களை மொழி பெயர்த்தும், டிங்கரிங் & பட்டி பார்த்து ஒப்பேத்தியது.எல்லாவற்றிற்கும் வந்தும், 'தந்தும்' ஆதரவளித்த நண்பர்களுக்கும்,திரட்டிகள்,சக பதிவர்கள்,வாசக நண்பர்கள் மற்றும்  எனது நன்றிகள்!

ஆர்குட் எனக்கு அறிமுகமான புதிதில், பெரும்பாலான நேரத்தை , அத்தளத்திலேயே கழித்தேன். இப்போது , பிளாக்கர் ! இன்னும் எத்தனை நாள் 'தீவிரமாக' எழுதுவேன் என்று தெரிய வில்லை.

என்னுடைய முதல் இடுகை  - முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க )


ஐம்பதாவது இடுகைன்னு நெனைச்சு நான் போட்ட 49 வது இடுகை

ஒரு விமர்சனம்...

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை , 'மதராசப்  பட்டினம் ' திரைப்படம் போயிருந்தேன். இந்த படத்திற்கான விளம்பரங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. மேலும், இயக்குனர் விஜயின் 'பொய் சொல்லப் போறோம்' திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகும் (அவருடைய 'கிரீடம்' படம் இன்னும் பார்க்க வில்லை. ஆனால், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். நன்றாகத்தான் இருந்தன !). ஆகவே இரண்டு வார காலம்  ஆனாலும், யாரிடமும் கதை கேட்காமல் போய்விடலாம் என்று நினைத்தால், நம்ம பதிவர்கள் பதிவில் முதல் இரண்டு வரிகளிலேயே படத்தின் 'ஒன் லைன்' ஐ சொல்லி விடுகிறார்கள் ! ஒரு வழியாக ஓரளவு கதையை யூகித்துக் கொண்டு , போய் அமர்ந்தேன் !



படத்தின் பெயர் போடுவதே அழகாக இருக்கிறது.பழைய மதராசப் பட்டினத்தை காட்டுவார்கள் என்று 'நம்பி' போன நான் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டேன்.பெரும்பாலான காட்சிகள் 'செட்' தான் என்று அப்பட்டமாகத் தெரிந்தாலும் , இப்படி காட்டுவதற்கே அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று என்றும் தோன்றுகிறது ! விமர்சனம் செய்வதுதான் சுலபம் , இல்லையா ?! படத்தின் இசை , ஜி.வி.பிரகாஷ்குமார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில் , தன்னை நிரூபித்தவர் ! பாடல்கள் எல்லாமே நன்றாகத் தான் இருக்கின்றன. பின்னணியிலும் முன்னணி வகிக்கிறார்! அப்புறம் ஒளிப் பதிவு - நீரவ் ஷா ! நல்லாத்தான் இருக்கு !


ஆர்யாவும் மற்ற நடிகர்களும் நன்றாக  நடித்திருக்கிறார்கள். அமரர் , திரு 'ஹனீபா' அவர்களுக்கு இதுதான் கடைசிப் படம். படப் பிடிப்பின் போதே, அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், அதையும் பொருட் படுத்தாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்று, இயக்குனர் விஜய் ஒரு வானொலிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளில், அவர் உடல் நலம் குன்றியது நன்றாகவே தெரிந்தது ! நல்ல கலைஞர் ! கதாநாயகி எமி ஜாக்சன் , ஏற்கனவே ஏதோ படத்தில் பார்த்தது போல இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.



ஒரு கட்டத்தில் இடைவேளை எப்படா வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவ்வளவு நீளமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம்.பிற்பாதியின் இறுதியிலும் கொஞ்சம் இழுவையாக இருப்பது போன்று தோன்றியது ! (மன்னியுங்கள்  விஜய் !).
படம் வெளியான வாரத்தில், கூட்டம் இன்றைய சென்னையை போல இருந்தது! பிறகு வந்த வாரங்களில் அப்போதைய சென்னை அளவிற்கு தான் கூட்டமிருந்தது ! ஒட்டு மொத்தமாக , மதராசப் பட்டிணம் - அழகு.

Saturday, July 17, 2010

10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... ?

எல்லோர் வீட்டிலும் ரிமோட் வைத்திருப்பீர்கள்.
அது,  டிவி க்கு மட்டும் இருக்கும். அல்லது டிவிடி க்கு மட்டுமோ அல்லது, மியூசிக் பிளேயர்க்கு மட்டுமோ இருக்கும்.மிஞ்சிப் போனால் டிவி , டிவிடி , மியூசிக் பிளேயர் மூன்றுக்கும் சேர்த்து இருக்கும் !


 நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு புது ரிமோட் கண்டுபிடித்திருக்கிறோம் . இதனை எல்லாவிதமான சுவிட்சுகளுக்கும் பயன் படுத்தலாம்.

அந்த ரிமோட்டின் சிறப்பம்சங்கள் :

1 . விலை பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை.

2 . மின்சார செலவு கிடையாது.

3 . பேட்டரி (செல் ) போடத் தேவையில்லை.

4 .யாவரும் எளிதாக உபயோகிக்கலாம்.

5 .சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

6 .டிவி, பிரிட்ஜ் , வாஷிங் மெஷின், தண்ணீர் மோட்டார்,பேன், மிக்சி, கிரைண்டர் என சகல வீட்டு உபயோக பொருட்களுக்கும் பயன் படுத்தலாம்.

குறைகள்:

1 . ஒரு மீட்டர் தூரம் வரையில்தான் 'சிக்னல்' கிடைக்கும்.

2 . உங்களுக்கு எத்தனை மீட்டர் தேவையோ அத்தனை 'ரிமோட்' வாங்க வேண்டியிருக்கும்.அல்லது உங்களுக்கு விருப்பப் பட்ட 'சைஸ்' ல வாங்க வேண்டும்.

3 .'உடையாமல்' பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு சாதகங்களும், இத்துனூண்டு பாதகங்களும் நிறைந்த அந்த ரிமோட்டை அறிமுகம்  செய்வதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன் !

இந்த ரிமோட்டை எங்க வீட்டுல , அம்மா 'அறிமுகம்' செய்த போது எடுத்த படம் உங்கள் பார்வைக்கு ,








இந்த ரிமோட்டிற்கு , தமிழ்நாடு மற்றும் இந்தியாவெங்கும் விற்பனையாளர்கள் வரவேற்கப் படுகிறார்கள். மேலும் தொடர்புக்கு ,

கெக்றான் மெக்றான் இன்னோவேசன்ஸ் அண்ட் இமேஜிநேசன்ஸ் ,
சென்னை குறுக்குத் தெரு,
தமிழ்நாடு (போஸ்ட்),
இந்தியா.



குறிப்பு : இந்த அட்ரசுக்கு  எந்த ஆட்டோவும் வரமுடியாது !

Friday, July 16, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 2...

'நான் ஏன் பதிவரானேன்' னு ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன்...

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1 ..

நீங்கள் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே இன்னொன்று !!


****************************************************************************************
என் அம்மா எப்பொழுதுமே பால் காய்ச்சும் போது கொஞ்சம் நிறையவே ( கொஞ்சமா இல்லை நிறையவா ?! ) தண்ணீர் ஊற்றுவார்.


"ஏம்மா, பால்ல இவ்ளோ தண்ணி கலக்குற ?! "


"ரொம்ப 'திக்'க்கா பால் குடிச்சா ஹார்ட் ப்ராப்ளம் வரும்ப்பா !! "


"ஆனா, ரொம்ப தண்ணியா குடிச்சா , கிட்னி ப்ராப்ளம் வந்துடுமேமா !"


****************************************************************************************

எங்கள் அலுவலகத்தில் வாரமொருமுறை அல்லது இருமுறை மீட்டிங் போட்டு , யாராரு எவ்ளோ ஆணி புடுங்கனும், எப்பக்குள்ள புடுங்கனும்னு டீடைலா சொல்லுவாங்க !
அதுவும் காலை போன உடனே ! ஆரம்பிச்சா ஒரு ஒன்றை மணி நேரம் தாங்கும் !! ஒரு நாள், காலை 'பேருண்டி' ( கொஞ்சமா சாப்பிடுறவங்களுக்குதான் 'சிற்றுண்டி'  !) சாப்பிடாமலே போய் விட்டேன் .அந்த நேரம் பார்த்து ,

"சரி மீட்டிங் வெச்சுக்கலாமா ?!" , இது குழு தலைவர் ( TEAM LEAD ஆமாம் !!)

"மொதல்ல ஈட்டிங் முடிச்சுக்கலாம் !" - வேற யாரு , அடியேன் தான் !

****************************************************************************************

அலுவலக நண்பர்கள் , ட்ரிங்க்ஸ் அடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"என்னய்யா , இன்னிக்கு சரக்கா ?!"

"ஆமா ! அந்த பிளான்ல தான் இருக்கேன் !"

"உனக்கு பரவாயில்ல , பேட்சுலர் ரூம்ல இருக்க . நான் சரக்கடிக்குறது தெரிஞ்சா, வீடு ரெண்டாயிடும் ! "

"சரக்கடிச்சா , வீடு மட்டுமில்ல , எல்லாமே 'ரெண்டா'யிடும் !!"

 ****************************************************************************************
சின்ன வயசுல ,  'அவரு FOREIGN ல இருந்து வந்திருக்காரு' , 'இவரு அடுத்த வாரம் FOREIGN போகப் போறாரு' ன்னு  மத்தவங்க பேசுறதக் கேட்டிருக்கேன் ! அப்பவெல்லாம் நான் நெனச்சுப்பேன் ,

"அமெரிக்கா , ஜப்பான் மாதிரி 'FOREIGN ' ங்கற பேர்ல   ஒரு வெளி நாடு இருக்கும் போல !"

ஆமா, அந்த FOREIGN எங்க இருக்குங்க ?!  



 ****************************************************************************************
 டிஸ்கி : இந்த இடுகைக்கு போட வேண்டிய டிஸ்கி ஏற்கனவே பாகம் 1 க்கு போட்டதைப் போலவே இருக்குமென்பதால், அதைப் படித்துவிடுமாறு கேட்டுக் 'கொல்'கிரேன் !

Saturday, July 3, 2010

பொறியியல் கலந்தாய்வு - ஒரு பார்வை ...

இது அட்மிஷன் காலம் ! 12  ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கும் , அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏதோ என்னால் முடிந்தவரை , எனக்கு தெரிந்த தகவல்களை தெரியப்படுத்தலாம் என்ற முயற்சியில் இந்த இடுகை!



12 ஆம்  வகுப்பு முடிந்தவுடனேயே, தங்கள் கல்லூரிக்கனவுகளை காண ஆரம்பித்து விடுகின்றனர் மாணவர்கள் ! தனக்கு என்ன மதிப்பெண் வரும் என்பதை, எல்லா மாணவர்களும் ஓரளவிற்கு கணித்திருப்பார்கள் ! அதனால், அவர்களே ஒரு சில கல்லூரிகளை தேர்ந்து எடுத்து ஒரு 'லிஸ்ட்' தயார் செய்து வைத்திருப்பார்கள் !

மேலும், கண்டிப்பாக பொறியியல் தான் படிக்க வேண்டுமென்று மாணவர்களை காட்டாயப் படுத்தாதீர்கள் ! அவர்கள் என்ன விருப்பப் படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, பிறகு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் . ( எதையும் 'பிளான்' பண்ணி பண்ணனும் !)  

 அப்படி உங்கள் 'பிளான்' பொறியியல் தான் என்றால்,  


சில டிப்ஸ் :


1 . உங்கள் கலந்தாய்வு நாளுக்கு முந்திய நாளே, கலந்தாய்வு நடக்கும் ஊருக்கு (சென்னை )சென்று விடுவது நலம் .

2 . எங்கே தங்குவது என்று யோசிக்கிறீர்களா ? கவலையை விடுங்கள் ! எனக்கு தெரிந்து , தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இரண்டு குடும்பத்திற்கும் குறைந்தது ஒருவர் சென்னையில் தங்கி இருக்கிறார் ! அப்படியே போன் பண்ணி , " தம்பி , மெட்ராசுக்கு நம்ம பய கவுன்சிலிங்குக்கு வரப் போறோம் . நீ ரூம்ல , இருந்தா, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு இருக்கோம் !" என்று சொல்லி வையுங்கள் ! படிப்பு விஷயமாதலால், அவரும் OK சொல்லி விடுவார் , முழு மனதுடன் ! அப்படி இல்லா விட்டாலும், நிறைய MANSION கள் இருக்கின்றன.

3 . நீங்கள் தங்கப் போகும் அறை , கலந்தாய்வு நடக்கும் இடத்தில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் ! இல்லையென்றால், ஒரு 4 மணி மேரம் முன்னதாக கிளம்பி விடுங்கள் !



4 .நீங்கள் , அண்ணா பல்கலைக் கழக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடனேயே , நிறைய நோட்டீஸ்கள் கொடுப்பார்கள், எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள் ! எப்படியும் அரை கிலோ தேறும் ! வேறொன்றுக்கும் உபயோகப் படாது !

இந்தியாவில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 35 % கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன !ஆனால், எல்லா கல்லூரிகளிலும் தரமான கல்விக்கு உத்திரவாதம் இல்லை! தமிழ்நாட்டில்  மொத்தமுள்ள 400  (தோராயமாக ) பொறியியல் கல்லூரிகளில் , 150 க்கும் குறைவான கல்லூரிகளில் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கல்வி கொடுக்கப் படுகின்றது ! எனவே நீங்கள் தயாரித்திருக்கும் லிஸ்டில் உள்ள கல்லூரிகள் , இந்த 150 க்குள்  இருத்தல் நலம் !

4 . எல்லா சான்றிதழ்களையும் , ஒன்றுக்கு இரண்டு நகல் எடுத்து  வைத்துக் கொள்ளுங்கள்.

5 . துண்டு பிரசுரங்களிலோ , அல்லது கல்லூரியின் இணைய தளத்திலோ வெளியிடப் பட்டிருக்கும் கட்டிட படங்களைப் பார்த்தோ , அவர்களின் 'SALIENT FEATURES ' என்று சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களைப் பார்த்தோ மட்டும் , எந்த கல்லூரியையும் தேர்வு செய்யாதீர்கள் ! அந்த கட்டிடங்கள் , நீங்கள் கட்டப் போகும் பணத்தில் கூட கட்டப் படலாம் !

6 . கண்டிப்பாக, CAMPUS INTERVIEW இருக்கும் கல்லூரியைத்தான் தேர்வு செய்ய வேண்டுமென்று அடம் பிடிக்காதீர்கள் ! எல்லோருக்கும் அது சாத்தியமில்லை ! 

(ஒரு மாணவன் , 60 % மதிப்பெண்களுடன் , ஓரளவிற்கு  தடையின்றி ஆங்கிலம் பேசி, சராசரியான தொழில்நுட்ப அறிவுடன் இருந்தாலே, கொஞ்சம்  தேடுதலும் இருந்தால் CAMPUS INTERVIEW இல்லையென்றாலும் , வெளியில் வந்து ஏதோ ஒரு வேலையில் சேரலாம் ! ஆனால் ,எடுத்த உடனேயே 30 ,000 ரூபாய் சம்பளத்தில், MNC யில் வேலை என்று எதிர்பார்க்க முடியாது ! அதற்கு ஓரிரு வருடங்கள் ஆகும் ! அதனால் என்ன ?! )

7 . கலந்தாய்வுக்காக நீங்கள் காத்திருக்கும் அறையில், ஒரு பெரிய திரையில் கல்லூரிகளின் காலி இட விவரங்கள் படமிட்டுக் காட்டப் படும். எனவே, நீங்கள் கலந்தாய்வுக்காக உள்ளே செல்லும் போது, மூன்று CHIOICE களை ச்சூஸ் பண்ண இது உதவியாக இருக்கும் !

8 . பெரும்பாலும் , நீங்கள் முதலில் தேர்வு செய்த கல்லூரியில், தேர்வு செய்த இடம் கிடைக்கும் .( இது கலந்தாய்வின் முதல் 10 நாட்களுக்கு  பொருந்தாது !) . இல்லாத பட்சத்தில், இரண்டாவது !


9 .IT மற்றும் ECE துறைகளில் தான், தன் மகன்/மகள் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள் ! CORE BRANCHES என்று அழைக்கப்படும்  சிவில்,ஆட்டோ மொபைல்,மெக்கானிக்கல் போன்ற துறைகள் , CIRCUIT BRANCHES என்று அழைக்கப் படும் IT ,ECE ,EEE ,CSE போன்ற துறைகள், இரண்டுமே சம அளவிலான வேலை வாய்ப்பினைத் தரக் கூடியவை !



10 . முடிந்த வரை, மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்க அனுமதியுங்கள். அங்கு அவர்கள் பொறியியலுடன் சேர்த்து வாழ்க்கையையும் கற்றுக் கொள்வார்கள் ! எதாவது ஒரு விளையாட்டில் , கல்லூரியின் சார்பிலோ அல்லது துறையின் சார்பிலோ பங்கு பெற ஊக்கப் படுத்துங்கள் ! படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல!

11 . தமிழ் வழி பொறியியல் இந்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப் பட இருக்கிறது ! அதற்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை !

மேலும் விவரங்களுக்கு - அண்ணா பலகலைக் கழக இணையதளம் - TNEA 2010 






இனிமையான கலந்தாய்வு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் !

Sunday, June 27, 2010

ராவணனும் பிரின்ஸ் ஆப் பெர்சியாவும்...

ஏன்...?
ஆமா...!
நெஜமாவா ?!
நீ என்ன  நம்பல ?!
எப்படி ?!
நேத்திக்குதான் !!
எத்தன பேர் ?
நான் மட்டும்தான் !
எவ்ளோ ?
45 ரூபா !
எங்க ?
தியாகராஜா !


என்னங்க எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
ஆமாங்க நேற்றைக்குதான் மணி ரத்தினத்தின் 'ராவணன்' படம் பார்த்தேன். அதைதான் , அவர் 'பாணியில்' சொல்ல 'ட்ரை' பண்ணேன் ! நீங்க டென்சன் ஆகாம மேலே ( அதாவது , 'கீழே' !) படிங்க !

'ஆக்சுவலா' (!) நான் போன வாரமே 'ராவணன்' பார்க்க போனேனுங்க ! அங்க என்னடான்னா, டிக்கட் இருந்தாதான் தியேட்டர் உள்ளயே உடுவேன்னுட்டானுங்க ! "போங்கடா நீங்களும் உங்க ராவணனும்" ன்னுட்டு, அப்படியே ரோடை கிராஸ் பண்ணி , நம்ம 'ஆஸ்தான' தியேட்டரான ஜெயந்தி தியேட்டருக்கு போய் , 'பிரின்ஸ் ஆப் பெர்சியா (தமிழில்)'  பாத்துட்டு வந்துட்டேன்! ராவணன் போயிட்டு புறமுதுகிட்டு வந்ததுல , ஒரு 20 நிமிஷம் MISS பண்ணிட்டேன் ! அந்த படத்துக்கே விமர்சனம் எழுதனும்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன் ! ஆனா, படத்துல ஒருத்தர் பேரும் தெரியாததால, 'பிரின்ஸ் ஆப் பெர்சியா' தப்பிச்சது ! மொத்ததுல, படம் அமர்க்களம் !



சரி , நம்ம ராவணன் பக்கம் வருவோம் ! என்னுடைய  'கொள்கைப்' படி, எந்த விமர்சனமும்  இதுவரை படிக்க வில்லை , யாரிடமும் கதையும் கேட்க வில்லை! என் விருப்பப் படி, படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே போய் உக்காந்தாச்சு !
( எனக்கெல்லாம், 'WELCOME' , 'முன் இருக்கையில் கால் வைத்து அசுத்தம் செய்யாதீர்' , 'புகை பிடிக்காதீர்', 'அரங்கை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் ' என்று SLIDE போடுவதிலிருந்து படம் பார்த்தால்தான் ஒரு திருப்தி !  இவையும் ஒரு படத்தின் அங்கமாகத்தான் பார்க்கிறேன் நான் !)

இதற்கு முன் , நான் தியேட்டரில் பார்த்த ஒரே மணி ரத்தினம் படம் - 'ஆய்த எழுத்து '!  அந்த படத்திற்கும் நான் போன போது கூட்டம் இல்லை! கடந்த வாரம் தியேட்டருக்கு உள்ளேயே போக முடியாத படிக்கு கூட்டம் ! இந்த வாரம் , பாதி தியேட்டர் காலி! ஏன் இந்த வித்தியாசம் ?! இணையமும் , VCD இணைத்து செய்யும் மாயமிது ! படம் வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே, அல்லது வெளியிட்ட நாளன்றே இணையத்தில் காணக் கிடைக்கின்றன அத்துணைத் திரைப்படங்களும் ! ( சில சமயங்களில் வெளியிடுவதற்கு முன்னமே ! )

இதையெல்லாம் தாண்டி இரண்டாவது வாரமும் கூட்டம் வர வேண்டுமென்று சொன்னால் ,படத்தின் விமர்சனங்கள் இந்த இடத்தில் முக்கிய பங்காற்றுகின்றன ! எதிர்மறையான எந்த ஒரு விமர்சனமும் படத்தின் வெற்றியை பெருமளவு பாதிக்கக் கூடும் !





இரண்டு வருடங்களாக பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம்.தமிழிலும் இந்தியிலும், விக்ரமும், அபிஷேக் பச்சனும் தங்களுடைய கதாப் பாத்திரங்களை மாற்றி நடிக்கிறார்கள் என்று பேசப் பட்டிருந்தாலும், தமிழில் அபிஷேக் நடிக்கவில்லை ! இந்தியில் விக்ரம் இருக்கிறாரா என்றும் தெரிய வில்லை ! ( யாராவது RAVAN பார்த்திருந்தா சொல்லுங்க ).
அதிரடியான இசையுடன் (வீரா வீரா !) பெயர் போட ஆரம்பிக்கிறார்கள் ! 'கந்தசாமி' எதிர்பார்த்த வெற்றி அளிக்காததால், விக்ரம் இந்த படத்தினை மிகவும் எதிர்பார்த்திருப்பார் ! நாமும்தானே ?! எதிர்பார்த்ததை கொடுத்திருக்கிறார் , மணி ரத்தினம் விக்ரமிற்கும், விக்ரம் நமக்கும் !


ஐஸ்வர்யா ராயை பார்க்கும் போது, ஏதோ இந்திப் படம் பார்க்கும் 'பீலிங்'  ! அவர் பேசும் தமிழும் ஒட்டவில்லை ! இந்தியில் பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ! ( எந்திரன் என்ன செய்யப் போகிறார் ?! ) பழைய மணிரத்தினம் ஹீரோக்களான , கார்த்தி , பிரபுவும் நடித்திருக்கிறார்கள் ! படம் முழுவதும் காட்டுப் பகுதியில் தான் ! அதற்கேற்றவாறு ஒளிப் பதிவில் அசத்தியிருக்கிறார்கள் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் ! கலை இயக்குனருக்கு சற்று சவாலான வேலைதான் ! சமாளித்திருக்கிறார் ! கொச்சியில் இருக்கும் என் நண்பனொருவன் , அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு போன போது, அந்த கோவில் செட் - ஐ பார்த்ததாகவும், மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும்  சொன்னான்! நானும் படம் வெளிவருவதற்கு முன்னரே  புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன் !



வசனங்கள் - சுஹாசினி. படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் வசனங்கள் என்னவென்று புரியவில்லை! காரணம் அவரா , அல்லது ஒலிப் பதிவா, இல்லை தியேட்டர் ஸ்பீக்கரா, இல்லை நம்ம காதா என்று புரிவதற்குள் அடுத்தடுத்த  வசனங்கள் ! ஆனால் கொஞ்ச நேரம் கழித்து புரிய ஆரம்பித்து விடுகின்றன ! நடுவே வரும் ப்ரியாமணி செக்மென்ட்டில் மட்டுமே கொஞ்சம் காடுகளில் இருந்து வெளிவந்திருக்கிறது கேமரா !

இசை - A . R ரஹ்மான் ! வேறென்ன சொல்ல ?! சூப்பரப்பு ! ( இருந்தாலும் 'செம்மொழி' பாட்டு மாதிரி இல்லையே என்று சொல்லப் படாது !) ' உசுரே போகுது ' பாட்டு முழுவதுமாக வருவதில்லை போன்ற ஒரு தோற்றம் !

திரைக்கதை & இயக்கம்  - மணி ரத்னம். இவரின் ஓரிரு படங்களைத் தவிர மற்ற அனைத்திலும் எதாவது ஒரு உண்மை  சம்பவமோ , அல்லது இதிகாசமோ தான் "BASE LINE" ஆக இருக்கும் ! இந்த வகையில் , இப்படத்தின்  கதாப் பாத்திரங்கள், யாரைக் குறிக்கின்றன என்று ராமாயணம் அறிந்த அனைவரும்  எளிதில் ஊகிக்க முடியும் ! இருப்பினும் பெயர் போடும் போது , " இப்படத்தில் வரும் கதாப் பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல ! " என்றுதான் போடுகிறார்கள் !

எது எப்படி இருந்தாலும், 'படம் நல்லா  இருந்துச்சு ' என்று சொல்ல வைத்து விடுகிறார் மணிரத்னம் !

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ?! பிருத்விராஜ் ! கதா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்கிறார் ! வாழ்த்துக்கள் பிருத்வி !

Friday, June 18, 2010

கடந்த இடுகைக்கான விடைகள்...

கடந்த இடுகையில் , கேள்விகள்  மாதிரி இரண்டு கேட்டிருந்தேன். அதற்கான விடைகள்  இந்த இடுகையின் கடைசியில். முயற்சிக்க விரும்புபவர்கள் , அங்கே கொஞ்சம் போயிட்டு வந்துடுங்க !

*********************************************************************************************
நம் வாழ்க்கையில் பல நேரங்களில் , 'பேசாம, பள்ளிக் கூட பையனாகவே இருந்திருக்கலாம்' என்று தோன்றும் இல்லையா ? அது போன்று , கடந்த வாரம் எனக்கு தோன்றியது ! 'ஏன்?' என்கிறீர்களா ?


 " உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி , தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை " என்ற செய்திதான் அதற்கு காரணம் !

இந்த மாநாடு தேவையா, இல்லையா என்கிற வாத, பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும் ! இந்த மாநாட்டுக்காக வெளியிடப்  பட்டிருக்கும் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது ! பார்க்கவும் , கேட்கவும் !


********************************************************************************************

கேள்வி மாதிரி - 1 :


முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?
 கடைசி வாரம் - பாப்பர் வீக் !

கேள்வி மாதிரி - 2 :
லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?

' SEBI' யும் நானும்  ?!


பின் குறிப்பு : இது போன்று பல நகைச்சுவைகளை (!) நான் எழுதியதுண்டு. இனி வரும் காலங்களில் எனது இடுகைகளை அவை அலங்கரிக்கும்  என்பதை , மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் 'கொல்'கிறேன் !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...